பிக்பாஸில் கெட்ட வார்த்தைகளை தெறிக்க விடும் போட்டியாளர்கள்… நடவடிக்கை எடுப்பாரா சிம்பு..?

Author: Rajesh
16 March 2022, 6:39 pm
Quick Share

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி, ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து போட்டியாளர்களுக்குள் ஏகப்பட்ட காரசாரமான சண்டைகளும், விவாதங்களும் ரசிகர்களை பூர்த்தி செய்து வருகிறது. இரண்டாவது டாஸ்க்கின் போது, காண்டம் பற்றி விவாதித்து பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்த நிகழ்ச்சியை சிறியவர்கள் முதல் பெரியர்கள் வரை பார்த்து வருகின்றனர். அதனால் இதைப் பற்றி பேச வேண்டாம் என்று வனிதா கேட்டுக்கொண்டதை அடுத்து போட்டியாளர்கள் இந்த விவாதத்தை நிறுத்திக் கொண்டனர்.

தொடர்ந்து, கொடுக்கப்பட்ட ஒரு டாஸ்க்கில், ஆசிரியாக அனிதா இருக்கிறார். மாணவராக இருக்கும் நிரூப் காதல் கடிதம் எழுதி கொடுக்க, அதனை அனிதா ஏற்க மறுக்கிறார். பின்னர் பாலாவிடம் ‘இவன் இருக்கிற உயரத்திற்கு எனக்கு லவ் லெட்டர் கொடுக்கிறான்’ என்று அனிதா முறையிடுகிறார். அதற்கு பாலா, ‘அவன் உங்க உயரத்துக்கு முழங்கால் போட்டுக்கொள்வான்’ என்ற பேசிய இரட்டை அர்த்தங்கள் பார்வையாளர்களை முகம் சுழிக்க வைத்தது.

இவ்வாறு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் காமெடி என்ற பெயரில் போட்டியாளர்கள் அடிக்கும் அர்த்தமற்ற பேச்சுக்கள் பலரின் மனதிலும் வெறுப்பை ஏற்படுத்தியது. அந்த வகையில், சில தினங்களுக்கு முன், நிரூப்பிடம் பேசும் அனிதா, கொச்சை வார்த்தைகளை பயன்படுத்தி இருந்தார். இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை உருவாக்கியது.

தொடர்ந்து, நேற்றைய நிகழ்ச்சியின் போது, பாலாஜி மற்றும் நிரூப் மாறி மாறி அடிக்கப் போகும் அளவுக்கு, சண்டை போட்டது பரபரப்பை கிளப்பியிருந்தது. இந்நிலையில், தற்போது ஜூலியை பார்த்து நிரூப் சொன்ன வார்த்தை பலரையும் முகம் சுழிக்கவைத்துள்ளது.

நிரூப்பை பார்த்து, “நீ பொய் தான் பேசுறே” என ஜூலி சொல்ல, பதிலுக்கு கொச்சை வார்த்தை ஒன்றை நிரூப் கூறினார். இதனைக் கேட்டதும் அதிர்ச்சியில் உறைந்த ஜூலி, “என்னடா பேசுனே என்ன பேசுனே. அவ்வளவு தான் உனக்கு” என கேட்டுக் கொண்டே, கதறுகிறார்.

உடனடியாக, மற்ற போட்டியாளர்கள் அருகில் வர, “நீ தான் பொய் சொல்லிட்டே இருக்கே. நீ தான் பொய் பேசுறே” என நிரூப் கத்திக் கொண்டே இருக்கிறார். நிரூப்பின் வார்த்தையால் மனமுடைந்த ஜூலி, கண் கலங்கவும் செய்கிறார். இது தொடர்பான ப்ரோமோக்கள், தற்போது பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் அதிகம் சர்ச்சையை உண்டு பண்ணியுள்ளது.

இது போன்ற கொச்சை வார்த்தைகள் பேசுவது பற்றி, சிம்பு மற்றும் பிக்பாஸ் குழுவினர் நிச்சயம் நடவடிக்கை எடுத்து, இம்மாதிரியான வார்த்தைகள் பயன்படுத்துவதை தவிர்க்க வழி செய்ய வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். வார இறுதியில், நடிகர் சிம்பு வரவுள்ள நிலையில், அவர் நிரூப் மற்றும் அனிதா ஆகியோர் செயல் பற்றி என்ன சொல்ல போகிறார் என்பதையும் எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Views: - 893

2

0