சர்ப்ரைஸாக ரஜினி செய்த செயல்..! இன்ப அதிர்ச்சியில் பொன்னியின் செல்வன் பட நடிகர்..!

Author: Vignesh
5 October 2022, 10:26 am
Quick Share

பொன்னியின் செல்வன் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை திரையுலக பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ரஜினிகாந்த், பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்த்த பின், இப்படத்தில் அருண்மொழிவர்மனாக நடித்துள்ள ஜெயம் ரவியை அழைத்து வாழ்த்தி உள்ளார்.

இதுகுறித்து நடிகர் ஜெயம் ரவி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:-

“அந்த ஒரு நிமிட உரையாடல் என்னால் மறக்க முடியாதது. எனது வாழ்க்கைக்கு புது அர்த்தத்தை சேர்த்தது. உங்களது அன்பான வார்த்தைகளுக்கும், குழந்தைத்தனமான உற்சாகத்திற்கும் நன்றி தலைவா. நீங்கள் பொன்னியின் செல்வன் திரைப்படத்தையும், எனது நடிப்பையும் விரும்பினீர்கள் என அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்” என குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக நடிகர் ரஜினிகாந்த், பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, இப்படத்தில் தான் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடிக்க விரும்பியதாகவும், ஆனால் மணிரத்னம், தன்னை அக்கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க விரும்பவில்லை எனவும் பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக எடுத்துள்ளார் மணிரத்னம். முதல் பாகம் தற்போது வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வருகிறது. அடுத்த பாகத்தை அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார்.

Views: - 411

0

0