கம கமன்னு காரசாரமா திருநெல்வேலி ஸ்டைலில் இட்லி பொடி!!!

Author: Hemalatha Ramkumar
1 April 2023, 7:01 pm
Quick Share

என்ன தான் பல விதமான சைட் டிஷ் இருந்தாலும், ஒரு சிலருக்கு இட்லி, தோசைக்கு பொடி இல்லாமல் உள்ளே இறங்காது. இட்லி பொடியில் ஏராளமான வகைகள் உண்டு. அந்த வகையில் இன்று நாம் பார்க்க போவது திருநெல்வேலி ஸ்பெஷல் இட்லி பொடி. இதற்கு மூன்றே பொருட்கள் இருந்தால் போதும். இப்போது இந்த அசத்தலான இட்லி பொடியை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

இந்த இட்லி பொடி செய்ய முதலில் ஒரு கப் கருப்பு உளுந்து எடுத்துக் கொள்ளவும். வெள்ளை உளுந்து பயன்படுத்தியும் செய்யலாம். ஆனால் கருப்பு உளுந்து பயன்படுத்தி செய்வது சிறப்பு. அடுத்து நமக்கு 1/2 கப் கருப்பு எள் மற்றும் பத்து வர மிளகாய் தேவைப்படும்.

இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து உளுந்து சேர்த்து வறுக்கவும். உளுந்து நன்கு சிவந்து வந்ததும் அதனை தனியாக ஒரு தட்டில் கொட்டி வைக்கவும். பின்னர் எள் சேர்த்து வறுத்து கொள்ளவும்.

எள் வறுப்பட்டு வெடிக்கும் போது அடுப்பை அணைத்து அதனையும் தட்டில் கொட்டி வைத்துக் கொள்ளுங்கள். பொருட்களை வறுக்கும்போது அடுப்பை குறைந்த தீயில் வைக்க வேண்டும். இல்லையெனில் பொருட்கள் கருகிவிடும்.

அடுத்தபடியாக ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி 1/2 தேக்கரண்டி பெருங்காயத் தூள் சேர்க்கவும். பின்பு வர மிளகாய் சேர்த்து வறுக்கவும். வர மிளகாய் வறுப்பட்டவுடன் ஏற்கனவே வறுத்து வைத்த உளுந்து மற்றும் எள்ளை சேர்த்து ஒரு நிமிடம் மட்டும் வறுத்து அடுப்பை அணைத்து கொள்ளலாம்.

இப்போது ஒரு மிக்ஸி ஜாரில் உப்பு மற்றும் வர மிளகாய் சேர்த்து பொடியாக அரைக்கவும். பின்னர் உளுந்து மற்றும் எள் சேர்த்து அரைக்கவும். இதனை பல்ஸ் மோடில் தான் அரைக்க வேண்டும். இல்லையென்றால் எள்ளில் இருந்து எண்ணெய் பிரிந்து வந்துவிடும். பொடியை அரைத்ததும் தட்டில் கொட்டி ஆற வைத்து ஒரு காற்று புகாத டப்பாவில் போட்டு மூடி வைக்கவும். அவ்வளவு தான், காரசாரமான திருநெல்வேலி இட்லி பொடி தயார்.

Views: - 521

0

0