ருசியான மொறு மொறு மிளகு வடை ரெசிபி!!!

Author: Hemalatha Ramkumar
30 May 2022, 2:14 pm
Quick Share

மிளகு சேர்த்து செய்யப்படும் இந்த வடை மிகவும் சுவையாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி ‌சாப்பிடுவர். இந்த மிளகு வடையை பெருமாள் கோவிலில் பிரசாதமாக தரப்படும். இதை உங்கள் வீட்டில் செய்து சுவைத்து பாருங்கள் மிக அருமையாக இருக்கும். வாங்க இந்த மிளகு வடை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
உளுந்தம் பருப்பு – 200 கிராம்

அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்

மிளகு – 2 டேபிள் ஸ்பூன்

சீரகம் – 1/2 டேபிள் ஸ்பூன்

பெருங்காயத்தூள் – சிறிதளவு

நல்ல எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

கடலை எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

*உளுந்தம் பருப்பை முதலில் கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

*பின்னர் தண்ணீர் இல்லாமல் உளுந்தம் பருப்பை ஒட்ட வடிகட்டவும்.

*உளுந்தம் பருப்புடன் தேவையான உப்பினைச் சேர்த்து, தண்ணீர் சேர்க்கமால் கொர கொரவென அரைத்துக் கொள்ளவும். அதாவது உளுந்தம் பருப்பினை 70 சதவீதம் அரைத்தால் போதுமானது.

*மிளகு, சீரகத்தை தனித்தனியாக தண்ணீர் சேர்க்காமல், கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

*ஒரு பாத்திரத்தில் அரைத்த உளுந்த மாவு, பொடித்த மிளகுப் பொடி, சீரகப் பொடி, அரிசி மாவு, பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து ஒரு சேர பிசையவும்.

*1 டேபிள் ஸ்பூன் நல்ல எண்ணெயை பிசைந்த உளுந்து கலவையில் சேர்த்து, நன்கு ஒருசேர பிசைந்து கொள்ளவும்.

*உளுந்த மாவுக் கலவையிலிருந்து சிறிய எலுமிச்சையளவு மாவினை எடுத்து, உருண்டையாக உருட்டவும். இவ்வாறு எல்லா மாவினையும் சிறுஉருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

*வாணலியில் கடலை எண்ணெய் ஊற்றிக் காய விடவும்.

*சதுர வடிவ வாழையிலை அல்லது பிளாஸ்டிக் கவரில் எண்ணெயைத் தடவிக் கொள்ளவும்.

*அதில் உருட்டிய சிறிய உருண்டையை வைத்து வடையாகத் தட்டவும்.

* பின் நடையின் நடுவில் சிறு துளையிட்டு காய்ந்த எண்ணெயில் போடவும்.

*வடையானது நிறம் மாற ஆரம்பித்ததும், அடுப்பினை குறைத்து சிம்மிற்கும் சற்று கூடுதலாக வைக்கவும்.

*பொன்னிறமாக இருபுறமும் வெந்ததும் வடையை வெளியே எடுக்கவும்.

* இப்போது சுவையான, ஆரோக்கியமான மிளகு வடை தயார்.

Views: - 892

0

0