சகோதரனின் உடலுடன் சாக்கடையோரம் அமர்ந்திருந்த சிறுவன்.. மரத்துப் போன மனிதநேயம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…

Author: Babu Lakshmanan
12 July 2022, 11:01 am
Quick Share

மத்திய பிரதேசத்தில் 2 வயது சகோதரனின் உடலுடன் 8 வயது சிறுவன் சாக்கடை ஓரம் தெருவில் அமர்ந்திருந்த சம்பவம் பார்ப்போரை பதறச் செய்துள்ளது.

மொரீனா மாவட்டத்தில் அம்பா நகரில் பத்பிரா கிராமத்தைச் சேர்ந்த பூஜாராம் ஜாதவ் என்பவரின் 2 வயது மகன் ராஜாவுக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. முதலில் வீட்டிலேயே நாட்டு வைத்தியம் செய்த முயற்சிகள் ஏதும் பலனளிக்காத நிலையில், பின்னர், மொரீனா மாவட்ட மருத்துவமனைக்கு சிறுவனை தூக்கி சென்றுள்ளனர். அவர்களுடன் ஜாதவின் 8 வயது மூத்த மகன் குல்ஷணும் சென்றுள்ளார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். ஏழ்மை நிலையில் உள்ள தனக்கு, மகனின் உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் சேவையை வழங்குமாறு மருத்துவமனை நிர்வாகத்திடம் பூஜாராம் கெஞ்சி கேட்டுள்ளார். ஆனால், அதனை அவர்கள் ஏற்கவில்லை. மாறாக, அதிகாரிகள் பணம் கேட்டதாக சொல்லப்படுகிறது.

இதனால், உடைந்த மனதோடு, மகனின் உடலை எடுத்துக் கொண்டு மருத்துவமனையை விட்டு வெளியே வந்தார் பூஜாராம். அப்போது, சாக்கடையோரத்தில் தனது மூத்த மகனை அமர வைத்து விட்டு, அவன் மடியில் இறந்து போன இளைய மகனின் உடலை வைத்து விட்டு, அந்த வழியாக வாகனம் ஏதேனும் வருகிறதா..? என்று அவர் பார்க்கச் சென்றுள்ளார்

குல்ஷணும், சகோதரனின் உடலை தனது மடி மீது வைத்து கொண்டு, தந்தை வருவார் என அரை மணிநேரம் வரை தெருவில் அமர்ந்து உள்ளார். இதனை கவனித்த பொதுமக்களில் சிலர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனைக் கேட்ட போலீசார், ஆம்புலன்ஸ் ஒன்றை ஏற்பாடு செய்து கொடுத்து, பூஜாராம் வீட்டுக்கு சென்று விடும்படி கேட்டுக்கொண்டனர்.

இதுபற்றி மொரீனா மாவட்ட மருத்துவமனையின் மருத்துவர் வினோத் குப்தா கூறுகையில், “மருத்துவமனை நிர்வாகம் பற்றி சொன்ன கருத்துக்கள் தவறானது. நாங்கள் ஆம்புலன்ஸ் ஒன்றுக்கு ஏற்பாடு செய்தோம். வாகனம் வரும்போது, பூஜாராம் வெளியே சென்று விட்டார்,” என கூறியுள்ளார்.

Views: - 629

0

0