சாலையில் நின்று கொண்டிருந்த 8 வயது சிறுமியை தரையில் தூக்கி அடித்த சைக்கோ : அதிர்ச்சி சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
18 November 2022, 9:40 pm
Child Attack - Updatenews360
Quick Share

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள மஞ்சேஷ்வர் பகுதியில் இஸ்லாமியர்களின் மதரஸா பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இங்கு பயிலும் 8 வயது சிறுமி ஒருவர் நேற்று மாலை பள்ளிக்கு வெளியே உட்கார்ந்து கொண்டு அழுதுக் கொண்டிருந்தார். இந்நிலையில், வழக்கமாக அவரை அழைத்துச் செல்வதற்காக சிறுமியின் மாமா அங்கு வந்திருக்கிறார்.

ஆசிரியர்கள் ஏதோ திட்டியிருப்பார்கள் என நினைத்த அவர், சிறுமியை தூக்கி நிற்க வைத்துள்ளார். அப்போது சிறுமி வலியில் துடித்துள்ளார்.
இதைக் கண்டு பதறிய சிறுமியின் மாமா, அவரிடம் என்ன நடந்தது என விசாரித்துள்ளார்.

அப்போது சிறுமி கூறியது அவரை குலைநடுங்கச் செய்தது. சாலையில் நின்றுக் கொண்டிருந்த போது திடீரென வந்த ஒருவர் தன்னை அடித்ததாக சிறுமி கூறினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் மாமா, பள்ளிக்கு வெளியே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்துள்ளார். அப்போது, சிறுமி வெளியே நின்று கொண்டிருக்கையில், உடல் பருமனாகவும் உயரமாகவும் வந்த நபர் ஒருவர், சிறுமிக்கு அருகே சென்று சத்தமாக கத்திவிட்டு, அவரை கழுத்தை பிடித்து தூக்கி ‘டமார்’ என தரையில் அடிக்கிறார். பிறகு ஏதும் நடக்காது போல அங்கிருந்து நடந்து செல்கிறார்.

இதில் அந்த சிறுமிக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதை பார்த்து அதிர்ந்த சிறுமியின் மாமா இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதன்பேரில், சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போலீஸார், இந்த இரக்கமற்ற செயலில் ஈடுபட்டது அதே பகுதியைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக் (40) என்பதை கண்டுபிடித்தனர்.

பின்னர் அபு பக்கரை கைது செய்த போலீஸார், அவர் மீது கொலை முயற்சி, போக்சோ ஆகிய பிரிவுகளின் கீழ் ஜாமீனில் வெளிவர முடியாதபடி வழக்கு பதிவு செய்தனர். இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Views: - 373

0

0