அரசுப் பள்ளியில் மாணவர்களே நடத்தும் வங்கி… ஒரே மாதத்தில் ரூ.42 ஆயிரம் சேமித்த மாணவர்கள் : ஊக்குவிக்கும் ஆசிரியர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
13 December 2022, 5:20 pm
School Bank - Updatenews360
Quick Share

தெலுங்கானா மாநிலத்தில் அரசு பள்ளி ஒன்றில் மாணவர்களால் நடத்தப்படும் வங்கி அம்மாநிலம் முழுவதும் புகழ்பெற தொடங்கி இருக்கிறது.

சேமிப்பின் முக்கியத்துவம் மற்றும் வங்கியில் பரிவர்த்தனை குறித்து மாணவர்கள் எளிதில் அறிந்துகொள்ளும் வகையில் தெலுங்கானா மாநிலம் ஜனகாமா மாவட்டம் சில்பூரில் உள்ள அரசு பள்ளியின் ஆசிரியர்களும், நிர்வாகிகளும் பள்ளி வளாகத்திலேயே மாதிரி வங்கி ஒன்றை திறந்துள்ளனர்.

மாணவ, மாணவியர்களே இந்த வங்கியின் மேலாளர்கள், காசாளர்கள், ஊழியர்கள் ஆக உள்ளனர். தினமும் வரிசையில் நிற்கும் மாணவர்கள் ரசீதுகளை நிரப்பி பாக்கெட் மணியாக கிடைத்த பணத்தை பாதுகாப்பாக தங்கள் கணக்கில் வரவு வைக்கின்றனர்.

அதே முறையில் பணத்தையும் எடுக்கின்றனர். ஸ்கூல் பேங்க் ஆஃப் சில்பூர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வங்கியில் ஒரே மாதத்தில் சிறுக சிறுக பள்ளி மாணவர்கள் ரூ.42,000 வரை சேமித்து வைத்துள்ளனர்.

மாணவர்களின் சேமிப்பை ஊக்குவிக்கும் அரசு பள்ளியின் நடவடிக்கைக்கு பெற்றோர் மற்றும் கல்வி ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். பள்ளி வேலை நேரத்தில் 3 இடைவேளைகளில் சுமார் அரை மணி நேரம் இந்த பள்ளி வங்கி செயல்பட்டு வருகிறது.

Views: - 259

0

0