அரசியல் கட்சியினர் பரிசாகக் கொடுத்த குக்கர் வெடித்து விபத்து… சிறுகாயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பெண்!!

Author: Babu Lakshmanan
21 February 2023, 2:07 pm
Quick Share

அரசியல் கட்சி கொடுத்த குக்கரில் சமைத்துக் கொண்டிருந்த போது, அது திடீரென வெடித்ததில் பெண் ஒருவர் அதிர்ஷ்டவசமாக படுகாயங்களுடன் உயிர்தப்பிய சம்பவம் நடந்துள்ளது.

தேர்தல் என்று வந்துவிட்டாலே, வாக்காளர்களுக்கு பணமும், பரிசும் வழங்குவது அரசியல் கட்சிகளின் சட்டவிரோத விதியாக உள்ளது. அரசியல் கட்சிகள் கொடுக்காவிட்டால், அதனை எதிர்பார்க்கும் நிலையில் பொதுமக்கள் தள்ளப்பட்டு விட்டனர்.

இந்த நிலையில், அரசியல் கட்சி கொடுத்த குக்கர் ஒன்று சமைக்கும்போது திடீரென வெடித்து விபத்துக்குள்ளானது.

கர்நாடகாவில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு, வேட்பாளராகக் களமிறங்கும் ஆர்வம் கொண்ட அரசியல்வாதிகள் மக்களைக் கவர பரிசுப் பொருட்களை வழங்கி வருகின்றனர். பல கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இதுபோல பரிசுப்பொருட்களைக் கொடுத்து வாக்கு சேகரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாகத் தெரிகிறது.

ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு குக்கர்களை விநியோகம் செய்வதற்காக உள்ளூர் தொழிற்சாலைகளில் ஆயிரக்கணக்கான குக்கர்களை ஆர்டர் செய்துள்ளனர். 5 லிட்டர் குக்கரை 400 முதல் 450 ரூபாய் விலையில் வாங்கியுள்ளனர்.

இந்தக் குக்கர்களைபெங்களூரு சோமேஸ்வரா காலனியில் வீடு வீடாகச் சென்று வழங்கியுள்ளனர். அப்படி வழங்கப்பட்ட குக்கர் ஒன்று சமைத்துக்கொண்டிருக்கும் நேரத்தில் திடீரென வெடித்து சிதறியதில் பெண் ஒருவர் காயமடைந்தார். அரசியல் கட்சியினர் கொடுத்த குக்கர் தரமற்றதாக இருந்ததால் தான் இந்த விபத்து நடந்ததாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம்சாட்டியுள்ளார்.

வாக்குகளை பரிசு பொருட்களாக விற்பது குற்றமாக இருந்து வரும் நிலையில், இதுபோன்ற தரமற்ற பொருட்களால் உயிர்ச்சேதம் ஏற்பட்டால், என்ன சொல்லி, யாரிடம் முறையிடுவது என்பதை பொதுமக்கள் உணர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

Views: - 312

0

0