இளம்பெண்ணுடன் சபரிமலையில் தரிசனம் செய்தாரா நடிகர் சிரஞ்சீவி..? கிளம்பிய புதிய சர்ச்சை..!!!

Author: Babu Lakshmanan
17 February 2022, 10:23 am
Quick Share

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர் சிரஞ்சீவி இளம்பெண்ணுடன் சுவாமி தரிசனம் செய்தது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாசி மாத பூஜைக்காக கடந்த 12ம் தேதி சபரிமலை நடை திறக்கப்பட்டது. 13ம் தேதி முதல் தொடர்ந்து 5 நாட்களுக்கு வழக்கமான மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்ற நிலையில், இன்று நடை அடைக்கப்படுகிறது. இந்த நிலையில், நடிகர் சிரஞ்சீவி திடீரென இன்று சபரிமலை ஐயப்பன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அவருடன் அவரது மனைவி மற்றும் பீனிக்ஸ் குரூப் உரிமையாளர்களான சுக்கப்பள்ளி சுரேஷ், சுக்கப்பள்ளி கோபி அவர்களது மனைவிகளும் வந்திருந்தனர்.

இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில், 50 வயதை கூட பூர்த்தியடையாத மதுமதி என்பவரை சுவாமி தரிசனம் செய்ய, கோவில் தேவஸ்தானம் அனுமதித்துள்ளதாகக் கூறப்பட்டது. இது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்து திருவிதாங்கூர் தேவஸ்தானம் தலைவர் அனந்தகோபன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், மதுமதி என்பவர் சபரிமலையில் சாமி தரிசனம் செய்தது உண்மை என்றும், ஆனால், சபரிமலை ஆசார முறைப்படி அவர் 50 வயதை கடந்தவர் என்றும், இதற்கான அடையாள அட்டை மற்றும் ஆவணங்களை பரிசோதனை செய்த பின்னரே அவர் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

இதற்கிடையே மதுமதியின் மகன் அவிநாஷ் சுக்கப்பள்ளி தனது முகநூலில் எனது தாயாருக்கு 55 வயதாகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

Views: - 709

0

0