உயிரிழந்த மகளை 2 கி.மீ சுமந்து சென்ற பெற்றோர்! ஆந்திராவில் சோகம்.!!
16 August 2020, 4:20 pmஆந்திரா : மருத்துவமனையில் மரணமடைந்த மகளின் உடலை இரண்டு கிலோமீட்டர் தூரம் பெற்றோர் சுமந்து சென்ற அவலம் ஆந்திராவில் அரங்கேறியுள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியில் உள்ள மலை கிராமங்களில் ஏராளமான அளவில் ஆதிவாசி பழங்குடியினர் வசித்து வருகின்றனர். அவர்கள் வசித்து வரும் மலை கிராமங்களுக்கு இதுவரை சரியான போக்குவரத்து வசதி இல்லை. அவர்கள் மருத்துவமனைக்கு செல்வது, ரேஷன் பொருட்கள் வாங்க செல்வது, பள்ளிக்குச் செல்வது ஆகியவற்றிற்கு நடந்தே செல்கின்றனர்.
உடல்நிலை பாதிப்பு, பிரசவம் ஆகியவற்றிற்கு நோயாளிகள், பெண்கள் ஆகியோரை இந்தப் பகுதியில் வசிக்கும் ஆதிவாசி மக்கள் மருத்துவமனைகளுக்கு டோலி கட்டி தூக்கி செல்வது வழக்கம். இந்த நிலையில் இன்று அந்தப் பகுதியில் உள்ள கும்ரிகுடா மண்டலத்தை சேர்ந்த கித்தலங்கி அதில் வசிக்கும் பாபு ராவ் என்பவரின் மகளான கிலிதாவுக்கு திடீரென்று உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது.
அந்த பகுதியில் அடைமழை பெய்து வரும் தற்போதைய நிலையில், சரியான போக்குவரத்து வசதிகள் இல்லாத காரணத்தால் மகள் கிலிதாவை பெற்றோர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு தூக்கி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
அரக்கு வேலி மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி கிலிதா மரணம் அடைந்தார். எனவே அவருடைய உடலை பெற்றோர் வெளியில் சொல்ல முடியாத வேதனையுடன் இரண்டு கிலோமீட்டர் தூரம் வீட்டுக்கு தூக்கி சென்றனர். போக்குவரத்து இல்லாததாலும், ஆம்புலன்ஸ் இல்லாததாலும் இது போன்ற தொடர் சம்பவங்கள் இந்தியாவில் ஏற்பட்டு வருவது வேதனைதரும் விஷயமாக உள்ளது.