மீண்டும் சந்திரபாபு நாயுடு பொதுக்கூட்டத்தில் நெரிசல் ; 3 பெண்கள் பலி.. இலவச சேலையை வாங்க முண்டியடித்த போது நிகழ்ந்த சோகம்!!

Author: Babu Lakshmanan
2 January 2023, 10:36 am
Quick Share

ஆந்திர மாநிலம் குண்டூரில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு நடத்திய நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள் பலியாகினர்.

தெலுங்கு தேசம் கட்சி சார்பில் ஆங்கில புத்தாண்டு, பொங்கல் ஆகியவற்றை முன்னிட்டு ஏழை பெண்களுக்கு கைத்தறி புடவைகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை குண்டூரில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, பெண்கள் சிலருக்கு புடவைகளை வழங்கி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

புடவைகளை வாங்குவதற்காக ஆயிரக்கணக்கான பெண்கள் அங்கு குவிந்தனர். இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு சென்ற பின் அக்கட்சித் தலைவர்கள் பெண்களுக்கு புடவைகளை வழங்கினர். அப்போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் 3 பேர் பரிதாபமாக மரணமடைந்தனர்.

மேலும், சிலர் படுகாயம் அடைந்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே, கடந்த 29ஆம் தேதி நெல்லூர் மாவட்டத்தில் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்ட கட்சி நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்டணி சிக்கி எட்டு பேர் மரணம் அடைந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் நடந்த அடுத்த மூன்றாவது நாள் குண்டூரில் சந்திரபாபு நாயுடு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 3 பெண்கள் மரணம் அடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 245

0

0