மதம்மாறி திருமணம் செய்த தம்பதி… பைக்கில் சென்ற போது மனைவி கண்முன்னே கணவன் ஆணவப்படுகொலை…? அதிர்ச்சி சம்பவம்!!

Author: Babu Lakshmanan
5 May 2022, 2:14 pm
Quick Share

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தம்பதியை தடுத்து நிறுத்தி, மனைவி கண்முன்னே கணவனை மர்ம நபர்கள் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரத்தை சேர்ந்தவர்கள் நாகராஜ் மற்றும் சையத் ஆஸ்ரின் சுல்தானா. இருவரும் கல்லூரியில் படித்த நாட்களிலிருந்து காதலித்து வந்ததை தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதம் 31ம் தேதி ஆரிய சமாஜத்தில் திருமணம் செய்து கொண்டனர். இதற்கு இருதரப்பு பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் நாகராஜ் தனது மனைவி சையத் ஆஸ்ரின் சுல்தானா உடன் நேற்று இரவு கருமான் காட் பகுதியிலிருந்து சரூர் நகர் பகுதியை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று சென்று கொண்டிருந்தார். அப்போது, சரூர்நகர் நகராட்சி அலுவலகம் எதிரில் இவர்களுடைய வாகனத்தை நிறுத்திய மற்றொரு வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் நாகராஜ் இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினர்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சையத் ஆஸ்ரின் சுல்தானா, உதவிக்கு சாலையில் சென்று கொண்டிருந்தவர்களை அழைத்த போதும், உதவ யாரும் முன் வராத நிலையில், நாகராஜ் மேலே படுத்து அடி விழாதவாறு காப்பாற்ற முயன்றார். இருப்பினும், அதற்குள் பலத்த காயமடைந்த நாகராஜ் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சரூர் நகர போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உஸ்மானியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் நாகராஜ் மற்றும் சையத் ஆஸ்ரின் சுல்தானா திருமணத்திற்கு சுல்தானா தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு இருந்த நிலையில், ஆணவம் கொலையாக இருக்கலாம் என சந்தேகப்படுவதாக தெரிவித்தனர்.

Views: - 902

0

0