மினி வேன் மீது லாரி மோதி கோர விபத்து… 9 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு… பல்நாடு அருகே நிகழ்ந்த சோகம்

Author: Babu Lakshmanan
30 May 2022, 2:00 pm
Quick Share

ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் ரண்ட்டசிந்த்தலா கிராம பகுதியில் சென்று கொண்டிருந்த டாட்டா ஏஸ் வாகனம் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் 9 பேர் பலியாகினர்.

பல்நாடு மாவட்டம் ரண்ட்டசிந்த்தலா கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் விவசாய பணி நிறைவடைந்ததை அடுத்து நந்தியால் மாவட்டம் ஸ்ரீசைலம் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற மல்லிகார்ஜுன சுவாமி ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்து ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை அவர்கள் பயணித்த டாட்டா ஏஸ் வாகனம் பல்நாடு மாவட்டம் ரண்ட்டசிந்த்தலா கிராமத்தின் அருகே சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் கவிழ்ந்த டாட்டா ஏஸ் வாகனத்தில் 38 பேர் பயணம் செய்த நிலையில் பயணித்த 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக மரணமடைந்தனர். மேலும் சிலர் படுகாயம் அடைந்தனர்.

விபத்து பற்றி தகவல் அறிந்த ரண்ட்டசிந்த்தலா போலீசார் விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மரணமடைந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. விபத்து பற்றி வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர்.

ஊருக்கு வந்தடைய சில நிமிடங்களே இருந்த நிலையில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 9 பேர் விபத்தில் பலியான சம்பவம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 589

0

0