பெங்களூரு கலவரம் : கைது செய்யப்பட்டவர்கள் சொத்துகள் பறிமுதல்.!!
14 August 2020, 5:18 pmகர்நாடகா : காங். எம்எல்ஏ உறவினர் வெளியிட்ட பேஸ்புக் பதிவால் வன்துறை வெடித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் சொத்துகளை பறிமுதல் செய்யும் பணி தொடங்கியுள்ளது.
கர்நாடகாவில் புலிகேசி நகர் தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் அகண்ட சீனிவாச மூர்த்தி. அவரது உறவினர் பெயர் நவின். இவர் தமது பேஸ்புக் பக்கத்தில் இஸ்லாம் பற்றிய பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அவரது இந்த பதிவு வைரலானது. சமூக நல்லிணக்கத்துக்கு கேடு விளைவிக்கும் பதிவு என விமர்சனங்கள் எழுந்தன. அவரது இந்த பதிவை கண்டு பொங்கிய மக்கள் எம்எல்ஏ அகண்ட மூர்த்தி வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் குதித்தனர்.
அப்போது திடீரென வன்முறை வெடித்தது. நவீனை கைது செய்ய கோரி, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எம்எல்ஏ வீடு மீது கற்களை வீசினர். அங்கிருந்த வாகனங்களையும் தீ வைத்தனர்.
விரைந்து வந்த போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி, தடியடியும் நடத்தினர். ஆனாலும், வன்முறை கட்டுக்குள் வராமல் போக, துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் 3 பேர் உயிரிழந்தனர்.
பின்னர் சர்ச்சைக்குரிய கருத்து பதிவு வெளியிட்ட காங்கிரஸ் எம்எல்ஏ உறவினர் நவின் கைது செய்யப்பட்டதாக பெங்களூரு போலீசார் அறிவித்தனர். இந்த நிலையில் கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களின் சொத்துக்களை எடுக்கும் பணிகளை கர்நாடக அரசு தொடங்கியுள்ளது.