பிரதமர் மோடியை சிக்க வைக்க காங்கிரஸ் போட்ட சதி…? முன்னாள் டிஜிபியோடு வசமாக சிக்கிய சமூக பெண் ஆர்வலர்!!

Author: Babu Lakshmanan
16 July 2022, 2:29 pm
Quick Share

குஜராத் கலவரம் வழக்கில் பிரதமர் மோடியை சிக்க வைப்பதற்காக காங்கிரஸ் சதித் திட்டம் திட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த 2002ல் ஆண்டு நடந்த குஜராத் கலவரம் தொடர்பான வழக்குகளில் அப்போதைய முதலமைச்சர் மோடி உள்பட 64 பேருக்கு சிறப்பு புலனாய்வு குழு நற்சான்றிதழ் அளித்ததைத் தொடர்ந்து, அவர்கள் அந்த வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

இதனை எதிர்த்து காங்கிரஸ் எம்பி இஷன் ஜாப்ரியின் மனைவி ஜாக்யா ஜாப்ரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

இதனிடையே, குஜராத் கலவரம் தொடர்பான வழக்குகளில் பொய் ஆதாரங்கள், சாட்சிகளை உருவாக்கிய குற்றச்சாட்டின் பேரில் சமூக ஆர்வலர் தீஸ்தா செதால்வட், ஸ்ரீகுமார் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இருவரையும் 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

சில நாட்களுக்கு முன்னர் ஆமதாபாத் குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட சஞ்சிவ் பட், தீஸ்தா செதால்வட், ஸ்ரீகுமார் ஆகியோர் மீதான கிரிமினல் சதி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தீஸ்தா செதால்வட் மற்றும் ஸ்ரீகுமார் ஆகியோர் ஜாமின் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களின் மீதான விசாரணையின் போது, சிறப்பு புலனாய்வு குழு துணை போலீஸ் கமிஷனர் சோலங்கி சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், காங்கிரசிடம் இருந்து சலுகைகள் மற்றும் பணத்தை பெற்று கொண்டு, குற்றம்சாட்டப்பட்டவர்கள், மிகப்பெரிய சதியில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்கள் அகமது படேலுடன் பல முறை சந்தித்து பேசியதாகவும் குற்றம்சாட்டினர்.

மேலும், முதற்கட்டமாக ரூ.5 லட்சம் பெற்று கொண்ட அவர்கள், பின்னர் 2 நாட்கள் கழித்து ரூ.25 லட்சம் பெற்று கொண்டதாக பகீர் தகவலை குறிப்பிட்டுள்ளது. பணத்தை பெற்றுக் கொண்டதை தொடர்ந்து, மூவரும் சேர்ந்து அப்போதைய முதலமைச்சர் மோடி உள்ளிட்ட பலர் மீது அவதூறு செய்ய உச்சநீதிமன்றம் முதல் பல கமிஷன்களில் பல மனுக்களை அளித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறப்பு புலனாய்வு குழுவின் இந்த அறிக்கை காங்கிரஸ் கட்சியினரிடையே அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

Views: - 558

1

0