மின்சாரம் தாக்கி சுருண்டு விழுந்த அணில்.. சிபிஆர் செய்து காப்பாற்றிய மின்வாரிய ஊழியர்கள்.. வைரல் வீடியோ!!

Author: Babu Lakshmanan
14 December 2022, 4:23 pm
Quick Share

கேரளா ; மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அணிலுக்கு சிபிஆர் கொடுத்து உயிரை காப்பாற்றிய மின்வாரிய ஊழியர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள சூரநாடு மின்வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்களான ரெகு மற்றும் விஜூ என்ற இரு ஊழியர்கள், சூரநாடு பகுதியில் உள்ள மின்மாற்றி இயந்திரத்தில் பழுது ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், பழுது பார்ப்பதற்காக அலுவலக வாகனத்தில் சென்றுள்ளனர்.

இவர்கள் சென்ற அதே நேரத்தில் மின் கம்பியில் இருந்து ஒரு பொருள் திடீரென கீழே சாலையில் விழுந்துள்ளது. என்ன என்பது என்று பார்ப்பதற்காக பக்கத்தில் சென்ற ஊழியர்களின் கண்ணில், மின்சாரம் தாக்கி அணில் ஒன்று சாலையின் நடுவே விழுந்துள்ளதையும் பார்த்துள்ளனர்.

முதலில் அணில் இறந்ததாக நினைத்து சாலையில் விழுந்த அணிலின் உடலை சாலையோரம் கொண்டு வந்து சோகத்துடன் முதலில் பார்த்துள்ளனர். பின்பு மின்வாரியத்தில் மின்சாரம் தாக்கிய விலங்குகளை காப்பாற்ற அளிக்கப்பட்டுள்ள முதலுதவி ஆலோசனைப்படி முயற்சிக்கலாம் என நினைத்து அணிலுக்கு சிபிஆர் கொடுத்துள்ளனர்.

எவ்வளவு முறை இவர்கள் முயற்சித்தும் அணில் எழும்பாததால் இறந்து போய்விட்டது என்றும், கருதி முயற்சியை கைவிடும் கட்டத்தில் இவர்களுடன் இருந்த மற்றொரு மின்வாரிய ஊழியர் ஒருமுறை கூட முயற்சி செய்து பார்க்கலாம் என கூறியுள்ளார். அதன்பேரில், அணிலுக்கு மீண்டும் சிபிஆர் கொடுத்துள்ளனர். அப்போது திடீரென அணில் கண்விழித்தும் உள்ளது.

இதையடுத்து, பக்கத்தில் உள்ள கடையிலிருந்து தண்ணீர் வாங்கி அந்த அணிலுக்கு அருந்தவும் கொடுத்துள்ளனர். அதை குடித்த பின்பு தேறிய ஆரோக்கியமான அணில் எழுத்து நடக்கவும் துவங்கியுள்ளது.

அதன் பிறகு கடையிலிருந்து மறுபடியும் வாழைப்பழம் ஒன்று வாங்கி கொடுத்துள்ளனர். அதை சாப்பிட்ட பின்பு தான், அணில் அங்கிருந்து நகர்ந்தும் உள்ளது.

“அங்கிருந்து செல்லும் போது காப்பாற்றிய தங்களை பார்த்து திரும்பிய அணில் எங்களுக்கு நன்றி கூறிவிட்டு செல்வது போல் தெரிந்தது. இதைப் பார்த்த தாங்கள் பூரித்துப் போய்விட்டோம். ஒரு உயிரை காப்பாற்றுவதற்கு இந்த அளவுக்கு சந்தோஷம் கிடைப்பது என்பது வார்த்தையால் கூட சொல்ல முடியாத ஒரு அனுபவம். இந்த அனுபவம் எங்களுக்கு கிடைத்துள்ளது,” என தெரிவித்துள்ளனர்.

ஒரு சிறு உதவி செய்தால் நன்றி கூட சொல்லாத இந்த ஆறு அறிவு படைத்த மனிதர்கள் கூட்டத்தில், ஐந்தறிவு படைத்த உயிரினம் ஒன்று தங்களை நோக்கி நன்றி கூறியது சொல்ல முடியாத அளவுக்கு தங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாகவும் இவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் இவர்கள் அணிலுக்கு மறுபிறவி கொடுக்க சிபிஆர் செய்யும் அந்த வீடியோ காட்சிகளும் இணையத்தில் வெளியானதை தொடர்ந்து, இந்த மின்வாரிய ஊழியர்களுக்கு பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.

Views: - 391

0

0