தகன மேடையில் தீவிபத்து…11 பேர் படுகாயம்: சடலம் சரியாக எரியவில்லை என பெட்ரோல் ஊற்றியதால் விபரீதம்..!!

Author: Rajesh
1 May 2022, 9:42 am
Quick Share

மும்பை: இறந்தவரின் உடலை தகனம் செய்தபோது உடல் சரியாக எரியவில்லை என பெட்ரோல் ஊற்றியதால் திடீரென தீ வேகமாக எரிந்து அருகில் நின்ற 11 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மராட்டிய மாநிலம் புனே மாவட்டம் தடிவாலா பகுதியை சேர்ந்தவர் தீபக் கும்ளே. 80 வயதான இவர் நேற்று வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். இதனை தொடர்ந்து தீபக் கும்ளேவின் உடலை அவரது குடும்பத்தினர் தகனம் செய்ய அப்பகுதியில் உள்ள இடுகாட்டிற்கு கொண்டு சென்றனர்.

அங்குள்ள தகன மேடையில் தீபக் கும்ளேவின் உடலை வைத்து எரியூட்டினர். அப்போது உடல் சரியாக எரியவில்லை என அருகில் நின்ற ஒருவர் எரிந்துகொண்டிருந்த சிதையில் பெட்ரோலை ஊற்றினார். இதனால், சிதையில் இருந்து பயங்கர வேகத்தில் தீ கொழுந்துவிட்டு எரிந்தது.

தீ வேகமாக எரிந்ததால் தகன மேடை அருகில் இருந்தவர்கள் மீது தீ காயம் ஏற்பட்டது. இதில், 11 பேர் படுகாயமடைந்தனர். இதனை தொடர்ந்து தீக்காயமடைந்த 11 பேரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Views: - 717

0

0