பைக்கில் சென்ற தந்தையை காரில் மோதி கொல்ல முயற்சித்த முன்னாள் ராணுவ வீரர் : ஷாக் சிசிடிவி காட்சி… !!

Author: Udayachandran RadhaKrishnan
29 May 2022, 2:24 pm
Son Try To Kill Father -Updatenews360
Quick Share

ஆந்திரா : மாநிலத்தில் சொத்துக்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தந்தையை காரில் மோதி விபத்து ஏற்படுத்திய மகன் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் பிலேர் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் ரெட்டி. 3 நாட்களுக்கு முன்னர் பிலேர் தனியார் பைக் ஷோரூம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.

விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று படுகாயமடைந்த சந்திரசேகர் ரெட்டியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில் சந்திர சேகர் ரெட்டி மகனான ஓய்வுபெற்ற முன்னாள் ராணுவ வீரர் லட்சுமி பிரசாத் ரெட்டி தந்தையை கொலை செய்ய விபத்தை ஏற்படுத்தி தப்பிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

சந்திரசேகர் ரெட்டி இரண்டு திருமணங்கள் செய்த நிலையில் இரண்டு மனைவிகளும் உயிரிழந்தனர். முதல் மனைவி மகனான ஓய்வுபெற்ற முன்னாள் ராணுவ வீரர் லட்சுமி பிரசாத் ரெட்டி மற்றும் தந்தை சந்திரசேகர் ரெட்டி இடையே நீண்ட நாட்களாக சொத்துப் பிரச்சினை நிலவி வந்தது.

இரண்டாவது மனைவி தம்பியுடன் வசித்து வரும் தந்தை சந்திரசேகர் ரெட்டி அவருக்கு சொத்தை எழுதி வைக்கலாம் என்று சந்தேகம் அடைந்த லட்சுமி பிரசாத் ரெட்டி தந்தையை கொலை செய்ய திட்டம் போட்டு 3 நாட்களுக்கு முன்னர் பிலேர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தந்தையை காரில் மோதி விபத்து ஏற்படுத்தி தப்பிச் சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து லக்ஷ்மி பிரசாத் ரெட்டி கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சொத்துக்காக தந்தையை மகனே காரில் மோதி கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியானதையடுத்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Views: - 573

0

0