ஓட்டலில் பிரியாணி சாப்பிட்ட அரசு மருத்துவமனை செவிலியர் பலி.. விஷமாக மாறிய உணவு : மீண்டும் அதிர்ச்சி சம்பவம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
4 January 2023, 1:04 pm
Biriyani Nurse Dead - Updatenews360
Quick Share

கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர் ரேஷ்மி (வயது 33). இவர் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு கோட்டயத்தில் உள்ள ஒரு உணவகத்தில் அல்பாமா சிக்கன் மற்றும் மந்தி பிரியாணி சாப்பிட்டுள்ளார்.

இதையடுத்து அவருக்கு சில மணி நேரத்திலேயே வாந்தி, வயிற்றுபோக்கு ஏற்பட்டுள்ளது. உடனே அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். இருந்தும் அவரது உடல் நிலை தொடர்ந்து மோசமடைந்தே வந்தது.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ரேஷ்மி உயிரிழந்தார். அதோடு இதே உணவகத்தில் சாப்பிட்ட 20 பேருக்கு மேல் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


செவிலியர் இறந்ததை அடுத்து அவர் பிரியாணி சாப்பிட்ட உணவகத்திற்கு உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கடைக்கு சீல் வைத்துள்ளனர்.

அதோடு உணவு விஷமானதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை அடுத்து கோட்டயத்தில் உள்ள அனைத்து உணவகத்திலும் சோதனை நடத்த சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டார்.

மாநிலத்தில் உள்ள 429 உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் செவ்வாய்க்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டதாக சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார்.

மேலும் அவற்றில், 43 நிறுவனங்களை மூட உத்தரவிடப்பட்டது. 138 உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, 44 உணவகங்களில் இருந்து உணவு மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. வரும் நாட்களிலும் ஆய்வுகள் தொடரும் என்று அமைச்சர் கூறினார்.

மந்தி பிரியாணி சாப்பிட்டு செவிலியர் உயிரிழந்த சம்பவம் உணவு பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரேஷ்மி மரணம் குறித்த செய்தி வெளியான உடனேயே போராட்டங்கள் வெடித்தன.

இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பு உறுப்பினர்கள் உணவகத்தை தாக்கி அதன் பெயர் பலகையை உடைத்தனர். கடந்த ஆண்டு சிக்கன் ஷவர்மா சாப்பிட்டு கல்லூரி மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் கேரளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 326

0

0