பிரம்மாண்டமான புதிய நாடாளுமன்றம் திறப்பு : ஆதினங்களிடம் ஆசி பெற்று செங்கோலை நிறுவிய பிரதமர் மோடி.. புல்லரிக்க வைத்த காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
28 May 2023, 10:25 am
Modi - updatenews360
Quick Share

டெல்லியில் 96 ஆண்டுகள் பழமையான நாடாளுமன்றத்தில் போதுமான இட வசதி இல்லாததால், புதிய கட்டடம் கட்ட மத்திய அரசு முடிவு செய்தது. அதன் படி, சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ், கடந்த 2020 ஆம் ஆண்டு புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்நிலையில், சுமார் 970 கோடி ரூபாய் செலவில் அதிநவீன வசதிகளுடன் புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதனை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.

முன்னதாக நாடாளுமன்ற கட்டடத்திற்குள் வருகை தந்த பிரதமர் மோடியை மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா உற்சாகமாக வரவேற்றார். தொடர்ந்து பிரதமர் மோடி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினார். இதையடுத்து பிரதமர் மோடிக்கு கும்ப மரியாதை வழங்கப்பட்டது.

இந்த விழாவில் தமிழ்நாட்டை சேர்ந்த 20 ஆதினங்கள் பங்கேற்றுள்ளனர். யாக வேள்வி வளர்த்து கணபதி ஹோமத்தோடு இந்த பூஜை நடைபெற்றது. பூஜையில் செங்கோல் வைத்து பூஜிக்கப்பட்டது.

பூஜை முடிந்த பிறகு 20 ஆதினங்கள் காலில் விழுந்து பிரதமர் மோடி ஆசி பெற்றார். இதையடுத்து, ஆதினங்களிடம் இருந்து செங்கோலை பெற்று கொண்டு நாடாளுமன்ற வளாகத்திற்குள் சென்றார்.

அதனைத்தொடர்ந்து நாடாளுமன்ற மக்களவைக்குள் சென்று தமிழக செங்கோலை பிரதமர் மோடி நிறுவினார். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் சபாநாயகர் இருக்கைக்கு அருகில் கண்ணாடி பெட்டிக்குள் செங்கோலை பிரதமர் மோடி நிறுவினார்.

செங்கோலை நிறுவிய பின்னர் பிரதமர் மோடி, சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் குத்துவிளக்கை ஏற்றி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சாமிகள் தலைமையில் 20 ஆதீனங்கள் பங்கேற்றனர். செங்கோலை வைத்த பின்னர் ஆதினங்களிடம் பிரதமர் மோடி ஆசி பெற்றார்.

Views: - 343

0

0