700 கி.மீ. பயணித்து இலக்கை தாக்கி அழிக்கும் ITCM ஏவுகணை: சோதனைக்கு தயார்…டி.ஆர்.டி.ஓ., அறிவிப்பு…!!
Author: Aarthi Sivakumar4 October 2021, 6:38 pm
புவனேஷ்வர்: முழுக்க முழுக்க உள்நாட்டு தயாரிப்பிலேயே உருவான ஐ.டி.சி.எம்., ஏவுகணை சோதனைக்கு தயாராக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஐ.டி.சி.எம்., என்ற ஏவுகணையை உருவாக்கி உள்ளது. கப்பலில் இருந்து செலுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஏவுகணை நீண்ட தூரம் பயணித்து நிலப்பரப்பை தாக்கக் கூடியது.
முழுக்க முழுக்க உள்நாட்டு தயாரிப்பிலேயே இந்த ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டி.ஆர்.டி.ஓ., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து உள்ளதாவது, பல்வேறு வகை ஏவுகணைகளை தயாரித்துள்ள டி.ஆர்.டி.ஓ.,வின் நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய முதல் கப்பல் ஏவுகணை ஐ.டி.சி.எம்., தான்.
கடந்த ஆகஸ்டு 11ம் தேதி இந்த ஏவுகணை சோதனை செய்யப்பட்டது. ஆனால் ஏவுகணையின் கட்டுப்பாட்டு அமைப்பில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக ஏவுகணை முழு வீச்சை கடக்கவில்லை. குறைபாடுகள் சரி செய்யப்பட்டு தற்போது முழு அளவிலான சோதனை நடத்தப்பட உள்ளது.
ஒடிசாவில் உள்ள கடற்கரையில் வரும் 6 அல்லது 8ம் தேதி இந்த ஏவுகணை சோதனை திட்டமிட்டபடி நடைபெறும். வானிலையை பொறுத்து இதில் மாற்றம் ஏற்படலாம். இந்த ஏவுகணை 700 கி.மீட்டருக்கு மேல் பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0
0