டெல்லியில் போராடுபவர்கள் விவசாயிகளே அல்ல: சர்ச்சை கருத்தை பதிவிட்ட கங்கணா ரணாவத்..!!
3 February 2021, 10:12 amபுதுடெல்லி: டெல்லியில் போராடுவது விவசாயிகள் அல்ல, நாட்டை பிளவுபடுத்தும் பயங்கரவாதிகள் என நடிகை கங்கனா ரனாவத் ட்விட்டரில் சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்டுள்ளார்.
டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகி ரிஹானா, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்படுவதாக வெளியான செய்தி ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ரிஹானா, ‘இது குறித்து ஏன் நாம் பேசவில்லை?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிலையில், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்திருந்த பாப் பாடகி ரிஹானாவை நடிகை கங்கனா ரணாவத் கடுமையாக சாடி உள்ளார். ‘ டெல்லியில் போராடுபவர்கள் விவசாயிகள் அல்ல, அவர்கள் இந்தியாவைப் பிளவுபடுத்த முயற்சிக்கும் பயங்கரவாதிகள்.
இதனால் பாதிக்கப்படக்கூடிய நமது தேசத்தை சீனா கையகப்படுத்தி, அமெரிக்காவைப் போன்ற ஒரு சீனக் காலனியாக மாற்ற முடியும். முட்டாள்… நாங்கள் உங்களைப் போல எங்கள் தேசத்தை விற்கவில்லை’ என கங்கனா ரணாவத் தனது ட்விட்டர் பக்கத்தில் ரிஹானாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
கங்கனா ரணாவத்தின் இந்த பதிவு கடும் சர்ச்சையை உருவாக்கி உள்ளது. போராடும் விவசாயிகளுக்கு எதிராக இவ்வளவு கடுமையான வார்த்தைகளை பயன்படுத்திய கங்கனா ரணாவத்துக்கு, சமூக வலைத்தளங்களில் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
0
0