அமேசானில் கருவேப்பிலை எனக் கூறி 1,000 கிலோ கஞ்சா கடத்தல் : விசாரணைக்கு மலுப்பல்… எச்சரிக்கும் அமைச்சர்!!!
Author: Babu Lakshmanan18 November 2021, 7:38 pm
1,000 கிலோ கஞ்சா கடத்தியது தொடர்பான விசாரணைக்கு முறையான ஒத்துழைப்பு வழங்கவில்லை எனக் கூறி, அமேசான் இணையதள நிறுவனத்திற்கு அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அண்மையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து அமேசான் இணையதளத்தின் மூலம் 1,000 கிலோ கஞ்சா கடத்தப்பட்டு, பல்வேறு மாநிலங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டதாக புகார் எழுந்தது. ஆன்லைன் வர்த்தகம் மூலம் கஞ்சா கடத்திய கும்பலை மத்திய பிரதேச போலீசார் மடக்கி பிடித்தனர். இதையடுத்து, தங்களின் இணையதளத்தின் மூலம் கஞ்சா கடத்திய சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அமேசான் நிறுவனம் தெரிவித்திருந்தது.
மேலும், அகமதாபாத் நிறுவனம் ஒன்று கருவேப்பிலை எனக் கூறி கஞ்சாவை கடத்தியது, போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதோடு, அமேசான் நிறுவனம் பல்வேறு இலைகளின் பெயரால் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
இந்த நிலையில், கஞ்சா கடத்தல் தொடர்பாக கடந்த திங்கள், செவ்வாய் கிழமைகளில் அமேசான் நிறுவனம் ஆஜராவதாக உறுதியளித்திருந்தது. ஆனால், இதுவரை போலீசாரின் முன்பு அந்நிறுவன அதிகாரிகள் ஆஜராகவில்லை. ஆனால், அமேசான் நிறுவனமோ, நாங்கள் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர தயாராக இருக்கிறோம் என்கிறது.
இந்த நிலையில், அமேசான் நிறுவனத்திற்கு மத்திய பிரதேச அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமேசான் நிறுவனத்துக்கு மத்திய பிரதேச போலீசார் சம்மன் அனுப்பி உள்ளதாகவும், சம்மனை மதிக்காமல் அமேசான் நிறுவனம் இருந்து வருவதாகக் கூறிய அவர், இந்த நிலை தொடர்ந்தால் அமேசானின் விற்பனைக்கான ஒழுங்குமுறைகளை மத்திய பிரதேச அரசே கொண்டுவர நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
0
2