ஓடும் ரயிலில் பெண் மீது தீவைப்பு… குழந்தை உள்பட 3 பேர் பலி.. கேரளாவில் பயங்கரம் ; தீவிரவாத தாக்குதலா..? போலீசார் விசாரணை..!!

Author: Babu Lakshmanan
3 April 2023, 8:57 am
Quick Share

ஓடும் ரயிலில் பெண் உள்பட 3 பேர் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் எலத்தூர் ரயில் நிலையம் அருகே ஆலப்புழா – கண்ணூர் விரைவு ரயில் நேற்றிரவு சென்று கொண்டிருந்தது. இரவு 9.37 மணியளவில் D1 பெட்டியில் பயணித்துக் கொண்டிருந்த பயணிகள் மீது மர்ம நபர் பெட்ரோல் ஊற்றி தீவைத்துள்ளார்.

இரண்டு பாட்டில் பெட்ரோலை சக பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்ததால் ரயிலில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதனை பார்த்த சக பயணிகள் அபாய சங்கலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தி, வெளியே குதித்து தப்பியோடினர்.

இருப்பினும், தீவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் பெண் உள்பட 3 பயணிகள் உயிரிழந்தனர். மேலும், 9 பேர் காயமடைந்தனர்.

தொடர்ந்து, ரயில்வே போலீசார் மற்றும் எலத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அங்கு விரைந்து வந்து, தீக்காயம் அடைந்த பயணிகளை மீட்டு கோழிக்கோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அபாய சங்கிலியை பிடித்து இழுத்து சகபயணிகள் ரயிலை நிறுத்தியதை சாதகமாக பயன்படுத்திய அந்த மர்ம நபர், பயணிகளோடு, பயணியாக அங்கிருந்து தப்பியோடினார். தலை மறைவான மர்ம நபரை பிடிக்க போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு கோழிக்கோடு மாவட்ட ஆட்சியர், ADGP கோழிக்கோடு மேயர் உட்பட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். மேலும், தனிப்பட்ட முறையில் பெண் மீது தாக்குதல் நடத்தி கொலை முயற்சியா…? அல்லது ரயிலில் விபத்து ஏற்படுத்த சதி திட்டமா என பல்வேறு கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓடும் ரயிலில் தீ விபத்து ஏற்படுத்தி தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டு தப்பி சென்ற சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்புயும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Views: - 471

0

0