CM பினராயி விஜயனை தொடர்புபடுத்தி பேசினால் கொன்று விடுவேன்… ஸ்வப்னா சுரேஷுக்கு வந்த கொலை மிரட்டல்.. போலீசார் விசாரணை

Author: Babu Lakshmanan
4 July 2022, 9:57 am
Quick Share

கேரளாவையே உலுக்கிய தங்கக் கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஸ்வப்னா சுரேஷுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு தூதரகத்தின் பேரில் தங்கம் கடத்தப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவத்தில் தூதரக அலுவலகத்தின் பணியாற்றி வந்த ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்ட பலர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 16 மாத சிறைவாசத்துக்குப் பின் சுவப்னா சுரேஷ் கடந்த ஆண்டு நவம்பரில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

சிறையில் இருந்து வெளியே வந்த அவர், முதலமைச்சர் பினராயி விஜயன், அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஆளும் இடதுசாரி கூட்டணி எம்.எல்.ஏ. கே.டி.ஜலீல் ஆகியோருக்கு தங்கக் கடத்தல் வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அதற்கு முதலமைச்சர் தரப்பில் இருந்து கடும் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், திருவனந்தபுரத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஸ்வப்னா சுரேஷ், இந்த வழக்கு குறித்து முதலமைச்சரின் பெயரை தொடர்ந்து குறிப்பிட்டு பேசினால் உன்னை கொலை செய்துவிடுவோம் என்று தொடர்ந்து எனக்கு தொலைபேசி மிரட்டல்கள் வருகின்றன.

முன்பும் எனக்கு இதுபோன்ற மிரட்டல்கள் வரும் என்றாலும், அவை இணைய அழைப்புகளாக இருக்கும். ஆனால் தற்போதைய மிரட்டல்கள் செல்போன் மூலமாக விடுக்கப்படுவதுடன், மிரட்டுவோர் தங்கள் முகவரியுடன் அடையாளத்தையும் வெளியிடுகிறார்கள். அந்த மிரட்டல் பதிவுகளை நான் போலீஸ் டி.ஜி.பி.க்கு அனுப்பியுள்ளேன், என்றார்.

ஸ்வப்னா சுரேஷுக்கு மிரட்டல் விடுத்த நபர்கள் முதலமைச்சர் பினராயி விஜயனின் ஆதராவளர்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 667

0

0