வானில் இருந்து பறந்து வந்த உலோகம்…குஜராத்தில் 3 இடங்களில் விழுந்த மர்ம பந்து: பொதுமக்கள் பீதி…சீன ராக்கெட்டின் சிதைவுகள்?

Author: Rajesh
17 May 2022, 5:41 pm
Quick Share

அகமதாபாத்: குஜராத்தில் உள்ள சில கிராமங்களில் சில நாட்களுக்கு முன்பு வானில் இருந்து உருண்டை வடிவமுள்ள நான்கு உலோகங்கள் விழுந்துள்ளன.

குஜராத்தில் உள்ள சில கிராமங்களில் சில நாட்களுக்கு முன்பு வானில் இருந்து உருண்டை வடிவமுள்ள நான்கு உலோகங்கள் விழுந்துள்ளன. இந்த உலோகங்கள் 1.5 அடி விட்டம் கொண்டதாக இருந்துள்ளது. இவைகள் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள டாக்ஜிபுரா, கம்போலாஜ் மற்றும் ராம்புரா கிராமங்களிலும், கெடா மாவட்டத்தின் பூமெல் கிராமத்திலும் விழுந்ததாக ஆனந்த் மாவட்டத்தின் துணைக் காவல் கண்காணிப்பாளர் பி.டி. ஜடேஜா தெரிவித்தார்.

தலா 5 கிலோ எடை

வானில் இருந்து விழுந்த இந்த பொருட்களால், யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். இந்த உலோகப்பந்துகள் செயற்கைக்கோளுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என எண்ணிய போலீசார், இதனை இஸ்ரோ மற்றும் அகமதாபாத்தில் உள்ள இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்திற்கு எடுத்துச்செல்ல முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனர்.

இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த வானியலாளர் ஜோனதன் மெக்டொவல் மே 12 அன்று பதிவிட்ட ஒரு ட்விட்டில், குஜராத்தில் விழுந்த உலோகப்பந்துகள் சாங் ஜெங் 3பி என்ற சீன ராக்கெட்டின் சிதைவுகளாக இருக்கலாம் என்று கூறினார்.

மேலும் இதுகுறித்து ஓய்வுபெற்ற இஸ்ரோ விஞ்ஞானி பிஎஸ் பாட்டியா கூறுகையில், இந்த உலோகப் பந்துகள் ராக்கெட்டுகள் மற்றும் செயற்கைக்கோள்களில் திரவ எரிபொருளான ஹைட்ராசைனைச் சேமிக்கப் பயன்படுத்தப்படும் எரிபொருள் தொட்டிகளாக இருக்கலாம் என்று கூறினார். வழக்கமாக, ராக்கெட்டில் உள்ள இந்த சேமிப்பு தொட்டிகள் எரிபொருள் முழுவதுமாக உட்கொண்ட பிறகு தானாகவே பிரிந்து தரையில் விழும் வகையில் அமைக்கப்படுகிறது என அவர் தெரிவித்தார்.

Views: - 586

0

0