நீட் மசோதாவை ஆளுநர் திருப்பிய அனுப்பி விவகாரம் : மாநிலங்களவையில் பேச அனுமதி மறுப்பு… திமுகவினர் வெளிநடப்பு

Author: Babu Lakshmanan
4 February 2022, 11:38 am
parliment postpond - updatenews360
Quick Share

டெல்லி : நீட் மசோதாவை தமிழக ஆளுநர் திருப்பிய அனுப்பியதைக் கண்டித்து மாநிலங்களவையில் இருந்து திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.

மருத்துவப் படிப்பை பயிலும் தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்குமாறு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சியினரும் ஒருங்கிணைந்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினர். இதனை குடியரசு தலைவரின் ஒப்புதலை பெறுவதற்காக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கிட்டத்தட்ட இந்த தீர்மானம் அனுப்பி வைக்கப்பட்டு 6 மாதங்களுக்கு மேல் ஆகியும், இதன் மீது ஆளுநர் எந்தமுடிவும் எடுக்காமல் இருந்து வந்தார்.

தீர்மானம் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வழக்கும் தொடரப்பட்டது. அதுமட்டுமில்லாமல் ஆளும் திமுகவினர் ஆளுநர் பலமுறை சந்தித்து இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

இந்த சூழலில், திமுகவின் நீட் விலக்கு தீர்மானத்தை ஆளுநர் ஆர்என் ரவி நேற்று திருப்பி அனுப்பினார். இது தமிழக அரசியல் கட்சியினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், நீட் விலக்கு கோரி தீர்மானத்தை ஆளுநர் திருப்பி அனுப்பி விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் விவாதிக்குமாறு வலியுறுத்தி திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர்.

அதற்கு பதில் அளித்த மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு, கேள்வி நேரம் தேவையில்லை என்றால் கூட பரவாயில்லை. தமிழக எம்பிக்களின் கோரிக்கை குறித்து தற்போது விவாதிக்க அனுமதிக்க முடியாது. ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பேசுங்கள், என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.

Views: - 1211

0

0