ஒடிசாவில் வாகனம் கவிழ்ந்து 10 பேர் பலி..! பிரதமர் மோடி இரங்கல்..!
1 February 2021, 12:39 pmஒடிசாவின் கோராபுட் மாவட்டத்தில் பிக்-அப் வேன் கவிழ்ந்ததில் 10 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 15 பேர் காயமடைந்தனர்.
சம்பவ இடத்திலேயே 10 பேர் உயிரிழந்த நிலையில், காயமடைந்த 15 பேர் கோட்பாட்டில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கோராபுட் காவல் கண்காணிப்பாளர் வருண் குண்டுப்பள்ளி தெரிவித்தார்.
கோட்பாட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முர்தாஹண்டி அருகே இந்த விபத்து நடந்துள்ளது. அண்டை மாநிலமான சத்தீஸ்கரைச் சேர்ந்த சுமார் 30 பேர் அடங்கிய குழு உறவினரின் துக்க சடங்கில் கலந்துகொண்டு தங்கள் கிராமத்திற்கு திரும்பிக்கொண்டிருந்தபோது இந்த கோர விபத்து நடந்துள்ளது.
காயமடைந்த 15 பேரில் 10 பேரின் நிலைமை ஆபத்தானதாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
கோராபுட் மாவட்டத்தில் உள்ள சிந்திகானில் இருந்து பிக்-அப் வேன் திரும்பி வந்தபோது, ஓட்டுநர் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்த பின்னர் அது கவிழ்ந்தது என்று போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில் சாலை விபத்தில் 10 பேரின் துயர மரணம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி வருத்தம் தெரிவித்தார்.
அவர் வெளியிட்டுள்ள ஒரு ட்வீட்டில், “ஒடிசாவின் கோராபுட்டில் நடந்த துயர விபத்தில் தங்கள் அன்பானவர்களை இழந்த அனைவரிடமும் எனது எண்ணங்கள் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று நம்புகிறேன்.” என இரங்கல் தெரிவித்துள்ளார்.
0
0