டெல்லியில் பிரதமர்களுக்கான அருங்காட்சியகம் திறப்பு: முதல் டிக்கெட் எடுத்து பார்வையிட்டார் பிரதமர் மோடி..!!

Author: Rajesh
14 April 2022, 5:52 pm
Quick Share

புதுடெல்லி: நாட்டின் பிரதமர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட பிரதான்மந்திரி சங்க்ரஹாலயா அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.

தலைநகர் டெல்லியில் தீன்மூர்த்தி எஸ்டேட் வளாகத்தில் இந்திய பிரதமர்கள் குறித்த விவரங்கள் அடங்கிய அருங்காட்சியகம் திறப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்தது. இதனையடுத்து தீன்மூர்த்தி எஸ்டேட் வளாகத்தில் ரூபாய் 271 கோடி செலவில் 10,975.36 ச. மீ., பரப்பளவில் அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டுள்ளது.

Image

இதில் 14 முன்னாள் பிரதமர்களின் அபூர்வப்படங்கள், குறிப்புகள், அவர்களின் சாதனைகள் உட்பட அனைத்தும் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கி நிறைவடைந்ததை அடுத்து பொதுமக்கள் பார்வைக்கு அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.

அதனை தொடர்ந்து அருங்காட்சியகத்தை பார்வையிடுவதற்காக முதல் டிக்கெட்டையும் பிரதமர் மோடி எடுத்தார். இந்த அருங்காட்சியகத்தில் கட்சி பேதமோ அல்லது சித்தாந்த பேதமோ கருதாமல் அனைவரின் சேவைகள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Image

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர்கள் பின்பற்றிய செயல் திட்டங்களையும் அவர்களின் சிந்தனைகளையும் இளம் தலைமுறையினருக்கு எடுத்துக் கூறும் வகையில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பின்னர் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது, நமது பிரதமர்களின் பெரும்பாலானவர்கள் எளிமையான பின்னணியில் இருந்து வந்தவர்கள் என்பது இந்தியர்களுக்கு பெருமை சேர்க்கும் விஷயம். தொலைதூர கிராமப்புறங்களில் இருந்து வந்து மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து, விவசாயி குடும்பத்தில் இருந்து வந்து, பிரதமர் பதவிக்கு வருவது இந்திய ஜனநாயகத்தின் சிறந்த மரபுகள் மீதான நம்பிக்கையை வலுப்படுத்துகிறது.

Image

ஒவ்வொரு சகாப்தத்திலும் ஒவ்வொரு தலைமுறையிலும் ஜனநாயகத்தை மிகவும் நவீனமானதாகவும், அதிகாரம் பெற்றதாகவும் மாற்றுவதற்கான தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒன்று அல்லது இரண்டு விதிவிலக்குகளைத் தவிர்த்து, ஜனநாயக வழியில் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் பெருமைமிக்க பாரம்பரியத்தை நாங்கள் கொண்டுள்ளோம். அதனால்தான் ஜனநாயகத்தை நமது முயற்சிகளுடன் வலுப்படுத்த வேண்டிய அவசியம் எங்களுக்கும் உள்ளது.

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த அருங்காட்சியம் மிகப்பெரிய உத்வேகமாக வந்துள்ளது. இங்கு வரும் மக்கள் நாட்டின் முன்னாள் பிரதமர்களின் பங்களிப்புகளை அறிந்து, அவர்களின் பின்னணி மற்றும் போராட்டம் குறித்து அறிந்து கொள்வார்கள் என்றார்.

Views: - 781

0

0