ராமர் கோவில் விவகாரம் : முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது உருது கவிஞர் முனாவர் ராணா சர்ச்சை விமர்சனம்..!
18 August 2020, 3:07 pmபிரபல உருது கவிஞர் முனாவர் ராணா இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது கடும் ஆட்சேபனைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். ராம் ஜன்மபூமி-பாபர் மசூதி நிலத் தகராறு வழக்கு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த அவர், அது நீதி அல்ல ஒரு உத்தரவு என்று கூறினார்.
நியூஸ் 18 இந்தி செய்தி சேனலுடன் பேசிய ராணா, ஓய்வு பெற்ற பின்னர் கோகோய் மாநிலங்களவையில் நியமனம் செய்யப்படுவதை கேள்வி எழுப்பினார். கோகோய் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ஏற்றுக்கொள்வது மிகவும் மோசமான செயல் என்று அவர் கூறினார்.
அயோத்தி தீர்ப்பை வழங்குவதற்காக கோகோய் தன்னை விற்றதாக அவர் குற்றம் சாட்டினார்.
கோகோய் ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்சிற்கு தலைமை தாங்கினார். அது அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய இடத்தில் ஒரு அறக்கட்டளையால் ராமர் கோவில் கட்டுவதற்கு வழி வகுத்தது. அவர் நவம்பர் 17 அன்று ஓய்வு பெற்றார். மார்ச் 16, 2020 அன்று கோகோய் ஜனாதிபதியால் மாநிலங்களவைக்குப் பரிந்துரைக்கப்பட்டார்.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு பெஞ்ச்சில் நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, டி.ஒய் சந்திரசூட், அசோக் பூஷண் மற்றும் எஸ் அப்துல் நசீர் இருந்தது குறிப்பிடத்தக்கது.
உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் ஒரு முக்கிய இடத்தில் புதிய மசூதியைக் கட்ட 5 ஏக்கர் நிலத்தை சன்னி வக்ஃப் வாரியத்திற்கு ஒதுக்குமாறு ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு மத்திய அரசிற்கு உத்தரவிட்டது.
பல நூற்றாண்டுகள் காத்திருப்பு முடிவுக்கு வரும் வகையில், தீர்ப்பு வழங்கப்பட்ட உடன் பிரதமர் நரேந்திர மோடி, ஆகஸ்ட் 05, 2020 அன்று அயோத்தியில் உள்ள ஒரு கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானத்திற்கான பூமி பூஜை விழாவில் பிரதமர் மோடி, உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பூமி பூஜை விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, “ஒவ்வொரு இதயமும் ஒளிரும். இது முழு நாட்டிற்கும் ஒரு உணர்ச்சிகரமான தருணம். ஒரு நீண்ட காத்திருப்பு இன்று முடிவடைகிறது” என்றார்.