‘இந்தியாவின் உள்விவகாரங்கள் மற்ற நாட்டு அரசியல் தீவனமல்ல’: கனடா பிரதமருக்கு பதிலடி கொடுத்த சிவசேனா…!!
1 December 2020, 3:39 pmமும்பை: டெல்லியில் விவசாயிகள் போராடி வரும் நிலையில் அங்குள்ள நிலைமை கவலை அளிப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ தெரிவித்த கருத்திற்கு சிவசேனா பதிலடி கொடுத்துள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லி எல்லைகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் போராட்டம் 6வது நாளாக இன்றும் தொடர்கிறது.
இதனையடுத்து, விவசாயிகளுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கிடையில், இந்தியாவில் நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டம் குறித்து கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ இன்று கருத்து தெரிவித்திருந்தார். அதில், டெல்லி விவசாயிகள் போராட்டம் மிகவும் கவலை அளிக்கும் வகையில் உள்ளது. உரிமைகளை பாதுகாக்க அமைதியான முறையில் நடைபெறும் போராட்டங்களுக்கு கனடா எப்போதும் ஆதரவு அளிக்கும் என கூறி விவசாயிகளுக்கு ஆதரவான கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்தியாவின் உள்விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டீனுக்கு சிவசேனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மூத்த தலைவரும், ராஜ்ய சபா எம்.பி.யுமான பிரியங்கா சதுர்வேதி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது,
ஜஸ்டீன் ட்ரூடோ அவர்களே உங்கள் கவலைகள் எங்களை தொட்டுவிட்டது. ஆனால், இந்தியாவின் உள்விவகாரங்கள் மற்ற நாட்டு அரசியல் தீவனமல்ல. நாங்கள் மற்றநாடுகளை மதிப்பது நடப்பது போல நீங்களும் மற்ற நாடுகளை மதித்து நடக்க வேண்டும். இந்த விவகாரத்தில் மற்றநாடுகள் கருத்து தெரிவிப்பதற்கு முன்பே பிரச்சனையை பிரதமர் மோடி தீர்த்துவைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
0
0