சொத்துக்காக தாயை அடித்து துன்புறுத்திய மகன் : சிக்கிய கொடூரன்… மகனுக்காக போலீசாரிடம் கெஞ்சிக் கண்ணீர் வடித்த தாய்!!

Author: Udayachandran RadhaKrishnan
22 February 2022, 1:22 pm
Son Attack Mom - Updatenews360
Quick Share

ஆந்திரா : தாயை அடிப்பதை அக்கம்பக்கத்தினர் வீடியோவாக எடுத்து பதிவு செய்த நிலையில் இணையத்தில் வைரலாகி போலீசார் நடவடிக்கை எடுக்க சென்ற போது தனது மகனை கைது செய்ய வேண்டாம் தாய் தடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தாடேப்பள்ளி பிரம்மானந்த புரத்தைச் சேர்ந்த நாகமணி (வயது 61). இவரது கணவர் வெங்கடேஸ்வர ராவ். இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர் இருவருக்கும் திருமணமாகிவிட்டது.

இவர்களுக்கு அரசு சார்பில் வழங்கிய நிலத்தில் வீடு கட்டி வசித்து வருகின்றனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வெங்கடேஸ்வர ராவ் உடல்நலம் பாதித்து இறந்துவிட்டார். மகன் சேஷு மனைவியுடன் வேறு வீட்டிற்கு சென்று விட்டார்.

இதனால் நாகமணி தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் நாகமணி வசித்துவரும் வீட்டை விற்று பணம் தரும்படி சேஷு தொடர்ந்து கேட்டு வந்தார். ஆனால் இதற்கு நாகமணி சம்மதிக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த சேஷு கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டிற்கு வந்து பெற்றெடுத்த தனது தாயின் வயிற்றில் காலால் எட்டி உதைத்தும் பாத்திரத்தால் தலையில் அடித்தும் கீழே தள்ளி சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரவி விட்டனர். மேலும் போலீசாருக்கு வீடியோ அனுப்பினர். இதனையடுத்து சேஷு மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனை தெரிந்து கொண்ட தாய் நாகமணி “எனது மகனை கைது செய்ய வேண்டாம் என்னை நல்ல முறையில் கவனித்துக் கொள்ளும்படி அறிவுறுத்துங்கள் அதுவே போதும்” என கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

இதனையடுத்து அதிகாரிகள் சேஷுவை அழைத்து அறிவுரைகளை வழங்கியதோடு மீண்டும் இதே போல் நடந்து கொண்டால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரித்தனர். கொடூரமாக தாக்கிய மகனை கைது செய்ய வேண்டாம் என தாய் கதறியதை பார்த்து அங்கிருந்தவர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.

Views: - 765

0

0