ஆம்ஆத்மி கட்சிக்கு ரூ.50 கோடி… டார்ச்சர் செய்த அமைச்சர் : சுகேஷ் சந்திரசேகர் பகீர் புகார்.. நெருக்கடியில் கெஜ்ரிவால்…!!

Author: Babu Lakshmanan
1 November 2022, 2:28 pm
Quick Share

டெல்லி : மோசடி வழக்கில் கைதான சுகேஷ் சந்திரசேகர், ஆம்ஆத்மி கட்சிக்கு ரூ.50 கோடி வழங்கியதாக அளித்த புகார் தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொழிலதிபரின் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்ததாக சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், தனக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக அப்போதைய ஆம்ஆத்மியின் சிறைத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு ரூ.10 கோடி கொடுத்ததாக, டெல்லி ஆளுநர் வி.கே. சக்சேனாவுக்கு, சுகேஷ் கடிதம் எழுதியுள்ளார்.

2017ல் கைது செய்யப்பட்ட பிறகு திகார் சிறையில் அடைக்கப்பட்ட போது, சிறைத்துறை அமைச்சராக இருந்த சத்யேந்தர் ஜெயின் பலமுறை தன்னைச் சந்தித்ததாகவும், 2019ல் சந்தித்த போது, அவரின் செயலாளர் தன்னிடம் ஒவ்வொரு மாதமும் 2 கோடி பாதுகாப்புப் பணமாகவும், சிறைக்குள் அடிப்படை வசதிகளைப் பெறவும் பெற்றுக் கொண்டதாகவும் அவர் கூறினார்.

ஜெயின், ஆம் ஆத்மி மற்றும் சிறைச்சாலைகளுக்கு பணம் செலுத்தியதை கடந்த மாதம் சிபிஐ விசாரணைக் குழுவிடம் வெளிப்படுத்தியதாகக் கூறிய சுகேஷ் சந்திரசேகர், சத்யேந்திர ஜெயின் புகாரை வாபஸ் பெறச் சொல்லி, தன்னை மிரட்டி வருவதாகவும், துன்புறுத்தியதாகவும், தாக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார்.

இதற்கிடையே ஆளுநர் வி.கே சக்சேனா, அடுத்த நடவடிக்கைக்காக டெல்லி மாநில தலைமைச் செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. டெல்லியில் ஆட்சி செய்து வரும் ஆம்ஆத்மி கட்சிக்கு சுகேஷின் இந்தக் கடிதம் முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 278

0

0