ஆட்டிசம் பாதித்தாலும் அபாரத் திறமை…இமயமலை ஏறி சாதனை படைத்த கோவை சிறுவன்: பியாஸ் குண்ட் மலையில் பறந்த வெற்றிக்கொடி..!!

Author: Rajesh
24 April 2022, 12:24 pm
Quick Share

கோவையைச் சேர்ந்த ஆட்டிசம் பாதித்த 12 வயது சிறுவன் இமயமலை தொடர்களில் ஒன்றான பியாஸ் குண்ட் மலையில் சுமார் 14,000 அடி உயரம் ஏறி புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

கோவை, சின்னவேடம்பட்டி சக்தி நகர் பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி, வினய கஸ்தூரி தம்பதியின் மூத்த மகன் யத்தீந்ரா (12).

யத்தீந்திரா ஆட்டிஸம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டதை அவரது இரண்டாவது வயதில் அறிந்த பெற்றோர், மனம் தளராமல் குழந்தைக்கு யோகா, கராத்தே, நீச்சல் பயிற்சிகளை கற்றுக் கொடுத்து வந்தனர்.

தொடர் பயிற்சிகளால் மகனிடம் முன்னேற்றம் இருப்பதை அறிந்த பெற்றோர், சிகரம் அறக்கட்டளை என்ற தன்னார்வ அமைப்பின் உதவியுடன் இமயமலை பகுதிகளில் வழக்கமாக டிரெக்கிங் செல்லும் குடும்ப நண்பரான ஆண்ட்ரூ ஜோன்ஸ் என்பவருடன் தனியாக மலையேற்றப் பயிற்சிக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து உத்தரகாண்ட் மாநிலத்தின் இமய மலைத் தொடர்களில் ஒன்றான பியாஸ் குண்ட் மலையில் பயிற்சியாளர் ஆண்ட்ரூ ஜோன்ஸுடன் ஏறத் தொடங்கிய சிறுவன் யத்தீந்திரா, 4 நாட்களில் சுமார் 14 ஆயிரம் அடி உயரத்தை எட்டி அசத்தினார்‌.

மேலும் அங்கு தேசியக் கொடியை அசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதன் மூலம் இமயமலை தொடர்களில் மலையேற்றப் பயிற்சி மேற்கொண்டு சுமார் 14 ஆயிரம் அடி உயரத்தை எட்டிய முதல் ஆட்டிசம் பாதித்த சிறுவன் என்ற சாதனையை யத்தீந்ரா நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 1020

1

0