தேர்தல் நடந்த 3 மாநிலங்களில் 2ல் பாஜக ஆட்சி உறுதி ; தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு சொல்வது என்ன..? முழு விபரம்..!!

Author: Babu Lakshmanan
27 February 2023, 8:30 pm
BJP Fund - Updatenews360
Quick Share

திரிபுரா உள்பட 3 மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் நடந்து முடிந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன.

வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் திரிபுராவில் கடந்த 16ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கிடையே, மேகாலயா மற்றும் நாகாலாந்தில் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. நாகாலாந்தில் 82 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

3 மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் மார்ச் 2ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

இந்த நிலையில், திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா சட்டமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டன. திரிபுராவில் பாஜக 36-45 இடங்களும், இடது சாரிகள் 6-11 இடங்களும், டிஎம்பி 9-16 இடங்களை பெறும் என இந்தியா டுடே சேனல் கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளது. அதேபோல, திரிபுராவில் பாஜக 36-45 இடதுசாரிகள் 6-11 இடங்களை பெறும் என என்டிடிவி கணிப்பை வெளியிட்டுள்ளது.

நாகலாந்தில் என்.டி.பி.பி – பாஜக கூட்டணி ஆட்சியை தக்கவைக்கும் என தெரிய வந்துள்ளது. நாகாலாந்து என்.டி.டி.பி 38-48 இடங்களும், என்.பி.எப் 3-8 இடங்களும், காங்கிரஸ் 1-2 இடங்களும், பிறகட்சிகள் 5-15 இடங்களை பெறும் என இந்தியா டுடே சேனல் கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளது.

அதேபோல, மேகாலயாவில் என்.பி.பி. ஆட்சியை தக்க வைக்கும் என கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. மேகாலயாவில் பாஜக 5 இடங்களும், காங்கிரஸ் 3 இடங்களும், என்பிபி -20 இடங்களும், பிற கட்சிகள் 30 இடங்களை பெறும் என டைம்ஸ் நவ் சேனல் கணித்துள்ளது. தேர்தல் நடந்து முடிந்த 3 மாநிலங்களில் 2ல் பாஜக ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ளதால், தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

Views: - 363

0

0