வறண்டு வரும் வனக்குட்டைகள்…தண்ணீர் இன்றி தவித்த குரங்கு: தாகத்தை தீர்த்த போக்குவரத்து காவலருக்கு குவியும் பாராட்டு..!!(வீடியோ)

Author: Rajesh
5 April 2022, 2:57 pm
Quick Share

மகாராஷ்டிரா: தாகத்தால் தவித்த குரங்கிற்கு காவலர் ஒருவர் தண்ணீர் கொடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி பலரது பாராட்டுகளை பெற்று வருகிறது.

நம் அன்றாட வாழ்வின் அங்கமான இணையம் நமக்கும் நாள்தோறும் பல்வேறு ஆச்சர்யங்களை, சில அதிர்ச்சிகளையும் அளிக்கிறது. இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன.

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது. நாம் மற்றவர்களிடம் அன்பாக இருப்பதில் தவறில்லை, அதுவும் குறிப்பாக விலங்குகளிடம் அன்பாக இருப்பதும் அவை நம்மிடம் அன்பாக இருப்பதும் பொதுவான விஷயம் தான்.

ஆனால், அதீத அன்பையும் மனிதநேயத்தையும் வெளிக்காட்டும் வீடியோ தான் தற்போது ட்ரெண்டாகி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் காவலர் ஒருவர் தாகத்தில் வாடும் குரங்குகளுக்கு தண்ணீர் கொடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மும்பை-அகமதாபாத் சாலையில் உள்ள மல்ஷேஜ் காட் என்ற இடத்தில் போக்குவரத்து காவலர்கள் அருகில் உள்ள காடுகளில் இருந்து சாலை விலங்குகளுக்கு கொடுக்க தண்ணீர் பாட்டில்களை எடுத்துச் செல்வதை அந்த வீடியோவில் காண முடிந்தது.

இதனையடுத்து, தாகத்தால் தவிக்கும் குரங்குக்கு அந்த தண்ணீரை கொடுக்கிறார் காவல் அதிகாரி. அந்த குரங்கும் பாட்டிலை கையில் வைத்துக்கொண்டு தாகத்தை தீர்த்துக்கொள்கிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

மேலும், போக்குவரத்துக் காவலருக்கு பலரும் தங்களின் பாராட்டுகளை பதிவு செய்துள்ளனர்.

30 நொடிகள் ஓடக் கூடிய இந்த வீடியோவில் காவலர் தண்ணீர் தர அதனை குடித்த வண்ணம் தனக்கு பின்னால் நகரும் வாகனங்களையும் அச்சத்துடன் நோட்டம் விடுகிறது அந்த குரங்கு. இந்த வீடியோவை இதுவரை 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பார்வையிட்டுள்ளனர்.

Views: - 936

0

0