ஊரடங்கு சமயத்தில் பள்ளிக்கு வரவழைத்து பாடம் நடத்திய ஆசிரியர்கள்..! உத்தரபிரதேசத்தில் அடாவடி..!
19 August 2020, 10:35 amஉத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளி கொரோனாவுக்கு இடையில் மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வகுப்புகளை நடத்தியது. மாணவர்கள் முககவசங்கள் இல்லாமல் மற்றும் சமூக இடைவெளி விதிமுறைகளை மீறி அமரவைக்கப்பட்டு பாடம் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மார்ச் முதல் நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
பல மாநிலங்களில் பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, உள் மதிப்பீட்டின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே கொரோனாவின் தீவிரம் தற்போது வரை நீடிப்பதால், பள்ளி, கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி சார்ந்த பயிற்சி நிறுவனங்களும் திறப்பதற்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் வகுப்புகள் மூலம் மாணவர்களுக்கு வீட்டிலிருந்தே கல்வி கற்பிக்க ஊக்குவிக்கப்படுகிறது.
இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தின் ஜலவுனில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி, மாணவர்களை வலுக்கட்டாயமாக பள்ளிக்கு அழைத்து, முககவசம் உள்ளிட்ட அடிப்படை பாதுகாப்பு விதிகளைக் கூட புறம் தள்ளி, வகுப்பெடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மாநில கல்வி அதிகாரி பிரேம்சந்த், பள்ளியின் உரிமையாளர் மற்றும் மேலாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.