கணவனே கண் கண்ட தெய்வம் என நிரூபித்த மனைவி : கோவில் கட்டி தினமும் பூஜை செய்து வழிபாடு!!
Author: Udayachandran RadhaKrishnan13 August 2021, 5:02 pm
ஆந்திரா : விபத்தில் உயிரிழந்த கணவரின் நினைவாக கோவில் கட்டி அவருக்கு சிலை வைத்து தினமும் வழிபாடு நடத்தி வரும் மனைவியின் செயல் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் அங்கிரெட்டி பத்மாவதி தம்பதி வசித்து வந்தனர். விவசாயம் செய்து வரும் இந்த தம்பதிக்கு ஒரு மகன், இரு மகள்கள் உள்ள நிலையில் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு நடந்த கார் விபத்தில் அங்கிரெட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
கணவருக்கு பின் விவசாயபணிகளை அவரது மகன் மேற்கொண்டு வந்த நிலையில் மறைந்த கணவனின் நினைவாகவே இருந்த பத்மாவதியின் கனவில் வந்த அவரது கணவர் கோவில் கட்ட சொன்னதாக கூறப்படுகின்றது.
இதையடுத்து தனது கணவருக்கு கோவில் கட்ட வேண்டும் என்ற விருப்பத்தை தனது மகனிடம் கூறியுள்ளார் பத்மாவதி. தாயின் விருப்பப்படியே தங்கள் விவசாய நிலத்தருகே தந்தையின் சிலையை பொருத்தி கோவிலை கட்டிக் கொடுத்திருக்கிறார் அவரது மகன்.
இதையடுத்து சம்பிரதாயத்துக்காக கோவிலை கட்டி பூட்டிபோட்டு வைத்திருக்காமல் தினமும்
கோவிலில் உள்ள தனது கணவரின் சிலைக்கு பூஜைகள் செய்து வழிபட்டு வருகிறார் பத்மாவதி.
இந்தக் கோவிலை கட்டுவதற்கு தனது சேமிப்பு பணத்தை பத்மாவதி கொடுத்த நிலையில், மகனும், அவரது நண்பரும் பண உதவி செய்ததாக பத்மாவதி தெரிவித்திருக்கிறார்.
தினமும் தனது கணவருக்கு பூஜைகள் செய்தாலும், தனது கணவரின் பிறந்த நாள், நினைவு நாள் மற்றும் பவுர்ணமி தினங்களில் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கி வருகிறார் பத்மாவதி. கணவனே கண்கண்டதெய்வம் என்று கோவில் கட்டி பூஜை செய்யும் பத்மாவதியின் இந்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
0
0