ராகுல் பிரதமராகும் வரை செருப்பு போட மாட்டேன்… 12 ஆண்டுகளாக வெறுங்காலுடன் நடந்து வரும் இளைஞர்..!!

Author: Babu Lakshmanan
28 January 2023, 1:24 pm
Quick Share

ராகுல் காந்தி பிரதமராகும் வரை செருப்பு அணியாத இளைஞர், தற்போது 12 ஆண்டுகளாக வெறுங்காலுடன் நடந்து வருகிறார்.

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் எம்பியான ராகுல் காந்தி, கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் 7ம் தேதி முதல் ஒற்றுமை யாத்திரை எனும் பெயரில் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். தமிழகம், கேரளா, கர்நாடகம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் வழியே இந்த யாத்திரை கடந்து சென்றுள்ளது.

இந்த யாத்திரையில் திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர். இதேபோன்று, ராகுல் காந்தியுடன் கடந்த இரண்டரை மாதங்களாக விக்ரம் பிரதாப் சிங் என்பவர் வெறும் காலுடன் நடந்து வருகிறார். இதனால், தனது பாதத்தில் வலி ஏற்பட்டு உள்ளது என்று கூறியபோதிலும் தொடர்ந்து காலணிகள் எதுவும் அணியாமலேயே யாத்திரையை தொடருகிறார்.

இதேபோல, மூவர்ண கொடியை ஏந்தியபடி தினேஷ் சர்மா என்பவர் பாதயாத்திரையில் கலந்து கொண்டுள்ளார். காவி நிற தலைப்பாகையுடனும், தேசிய கொடியுடன் கூடிய ஆடையணிந்துள்ள அவர், ராகுல் காந்தி நாட்டின் பிரதமராகும் வரை வெறுங்காலுடனேயே தொடர்ந்து இருப்பேன் என கூறியுள்ளார்.

2011ம் ஆண்டில் இருந்தே 12 ஆண்டுகளாக அவர் காலணிகள் எதுவுமின்றி தனது முடிவில் உறுதியாக இருந்து வருவது பலரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறது. சட்டப்படிப்பு படித்துள்ள அவர், யாத்திரையின்போது, ராகுல் காந்தியின் பாதுகாப்பு வளையத்திற்குள் எளிதில் சென்று வரும் வகையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

Views: - 244

0

0