திருமணம் ஆகாததால் விரக்தி… பேண்டு வாத்தியங்களோடு மாப்பிள்ளை கோலத்தில் ஊர்வலம்… அதிர்ந்து போன ஆட்சியர்..!!

Author: Babu Lakshmanan
23 December 2022, 9:56 am
Quick Share

மகாராஷ்டிராவில் திருமணமாகாத விரக்தியில் மாப்பிள்ளை கோலத்தில் குதிரையில் சென்று ஆட்சியரிடம் இளைஞர்கள் மனு கொடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

சேலாப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர்கள் சிலர் பேண்டு வாத்தியங்கள் முழங்க. ஆட்டம் பாட்டத்துடன், மாப்பிள்ளை கோலத்தில் ஊர்வலமாக சென்றனர். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள், ஆட்சியர் அலுவலகத்தில் கலப்பு திருமணம் ஏதாவது நடக்கப் போவதாக நினைத்துக் கொண்டனர்.

ஆனால், மாப்பிள்ளை கோலத்தில் மிடுக்காக இருந்தாலும், கவலையுடன் ஆட்சியர் அலுவலகத்திற்குள் சென்ற அவர்கள், திருமண வயதை கடந்தும் தங்களுக்கு மணப்பெண்கள் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தை மனுவாக ஆட்சியரிடம் கொடுத்தனர். மேலும் தங்களுக்கு அரசே மணப்பெண்கள் பார்த்து தர வேண்டும் என்ற நூதன கோரிக்கையை அவர்கள் முன்வைத்தனர். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த ஊர்வலத்தை ஏற்பாடு செய்த ஜோதி கிராந்தி பரிஷத் அமைப்பின் நிறுவன தலைவர் ரமேஷ் பரஸ்கர் கூறியதாவது:- எங்களது ஊர்வலத்தை பார்த்து மக்கள் கேலி செய்யலாம். ஆனால் கசப்பான உண்மை என்னவென்றால் மகாராஷ்டிராவில் ஆண்- பெண் விகிதம் கடுமையான வித்தியாசத்தில் உள்ளது. ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. பெண் சிசுக்கொலைகள் தான் இந்த பாலின வித்தியாசத்துக்கு முக்கிய காரணம்.

கருவில் பாலினம் கண்டறியும் தடுப்பு சட்டத்தை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்று ஆட்சியரிடம் மனு கொடுத்து அரசை வலியுறுத்தியுள்ளோம், எனக் கூறினார். மகாராஷ்டிராவில் தற்போது பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு 889 பெண்கள் என்ற அடிப்படையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 354

0

0