ஸ்ரேயாஷ் ஏமாற்றம்.. அஸ்வின் – குல்தீப் ஜோடி அபாரம் ; முதல் பந்திலேயே வங்கதேசத்திற்கு அதிர்ச்சி கொடுத்த சிராஜ்!!

Author: Babu Lakshmanan
15 December 2022, 1:59 pm
Quick Share

வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 404 ரன்களை குவித்துள்ளது.

இந்தியா வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சட்டோகிராமில் நேற்று (டிச.,14) தொடங்கியது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கேஎல் ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. கில் (20), கேஎல் ராகுல் (22) அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். பின்னர் வந்த கோலியும் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

பின்னர், பண்ட் (46), புஜாரா (90) ஆகியோர் சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்தார். இதைத் தொடர்ந்து, ஸ்ரேயாஷ் ஐயர் மட்டும் நிலைத்து நின்று ஆடி ரன்களை குவித்தார். இதனால், முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் எடுத்திருந்தது.

இதைத் தொடர்ந்து, 2வது நாள் ஆட்டம் தொடங்கியதும் ஸ்ரேயாஷ் ஐயர் 86 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர், ஜோடி சேர்ந்த அஸ்வின் – குல்தீப் யாதவ் இணை சிறப்பாக நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தது. 350 ரன்களையே இந்திய அணி எட்டுமா..? என்று சந்தேகமாக இருந்த நிலையில், இருவரும் மளமளவென ரன்களை குவித்தனர்.

அரைசதம் அடித்த அஸ்வின் (52), குல்தீப் யாதவ் (40) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் இந்திய அணி 404 ரன்களை குவித்து ஆட்டமிழந்தது.

வங்கதேச அணி தரப்பில் தைஜு இஸ்லாம், மெஹிதி ஹாசன் ஆகியோர் தலா 4 விக்கெட்டுக்களும், எபடாத் ஹுசேன், ஹாலித் அகமது தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பின்னர், 2வது இன்னிங்சை தொடங்கிய வங்கதேச அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. சிராஜ் வீசிய ஆட்டத்தின் முதல் பந்திலேயே ஷாண்டே ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து, யஷிர் அலியின் (4) விக்கெட்டை உமேஷ் யாதவ் கைப்பற்றினார். இதனால், வங்கதேச அணி 5 ரன்னுக்கே 2 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறி வருகிறது.

Views: - 324

0

0