காவலர் நலஅங்காடியில் 40 லட்சம் மோசடி… உதவி காவல் ஆய்வாளர் உட்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு ; 3 பேர் கைது..!!

Author: Babu Lakshmanan
13 August 2022, 6:09 pm
Quick Share

காவலர் நலஅங்காடியில் 40 லட்சம் மோசடி செய்த உதவி காவல் ஆய்வாளர் உட்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தஞ்சாவூர் மேம்பாலம் அருகில் சரக காவல்துறை தலைவர் அலுவலகம் எதிரில், தமிழ்நாடு காவலர் பல்பொருள் அங்காடி செயல்பட்டு வருகிறது. இதில் உதவி காவல்ஆய்வாளர் வீராச்சாமி, மற்றும் தலைமை காவலர் வீரம்மாள், காவலர்கள் வளர்மதி, கோகிலவாணி, மனோஸ்ரீ ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 2021 முதல் தற்போது வரை உள்ள கணக்குகளை தணிக்கை அதிகாரிகள் தணிக்கை செய்த போது, முறைகேடு நடந்திருப்பது தெரியவந்துள்ளது. அதாவது விற்பனை செய்வதற்காக வாங்கப்பட்ட எலக்ட்ரானிக்ஸ் உட்பட பல பொருள்கள் விற்பனை நிலையத்தில் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

ஆனால் பொருள்கள் வாங்கப்பட்ட பில் உள்ளிட்ட ஆவணங்கள் இருந்தும், பொருள்கள் விற்பனை செய்ததற்காக எந்த ஆவணங்களும் இல்லை, இது குறித்து உதவி காவல் ஆய்வாளர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பொருள்களை வெளிசந்தையில் விற்பனை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் அங்காடியில் பொருள்கள் அனைத்தும் விற்பனை ஆகாதது போல் கணக்கு காட்டியுள்ளனர். இதில் சுமார் 40 லட்சம் வரை மோசடி செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து தணிக்கை அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில், மாவட்ட குற்றபிரிவு அதிகாரிகள் காவல் உதவி ஆய்வாளர் வீராச்சாமி, தலைமை காவலர் வீரம்மாள், காவலர்கள் கோகிலவாணி, வளர்மதி, மனோஸ்ரீ ஆகியோர் மீது 120(B), 406, 409, 381 நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து வீரச்சாமி, வீரம்மாள், வளர்மதி ஆகியோரை கைது செய்துள்ளனர். மேலும் கோகிலவாணி மற்றும் மனோஸ்ரீ ஆகியோரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

Views: - 595

0

0