10ம் வகுப்பு பொதுத்தேர்வின் போது மாணவியிடம் சில்மிஷம்.. 3 மணிநேர தேர்வுக்கு பின் நடந்த சம்பவம் ; ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது !

Author: Babu Lakshmanan
11 April 2023, 1:04 pm
Quick Share

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே 10ஆம் வகுப்பு பொதுதேர்வு அறையில் மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு கடந்த 6ம் தேதி பொதுத்தேர்வு துவங்கி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் 116 தேர்வு மையங்களில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் மணலிக்கரை அருகே உள்ள புனித மரிய கொரீட்டி மேல்நிலைப்பள்ளியில் கடந்த 6ம் தேதி மாணவ, மாணவிகள் தமிழ் தேர்வு எழுதினர். அந்த பள்ளியில் உள்ள ஒரு தேர்வறை கண்காணிப்பாளராக அருமனை அருகே உள்ள அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் வேலவன் என்பவர் நியமிக்கப்பட்டு இருந்தார்.

இவர் பணியில் இருந்த தேர்வறையில் வேர்கிளம்பி பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி ஒருவர் தேர்வு எழுதினார். அந்த மாணவியின் அருகில் சென்ற ஆசிரியர் வேலவன் மாணவியின் உடலில் தொட்டு பேசி சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால். அதிா்ச்சி அடைந்த மாணவி தேர்வு எழுதும் சமயத்தில் என்ன சொல்வது எனத் தெரியாமல் இருந்துள்ளார். தேர்வு முடிந்ததும் வீட்டுக்கு சென்ற மாணவி பெற்றோரிடம் ஆசிரியரின் தவறான நடவடிக்கை பற்றி கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் இதுகுறித்து புகார் கூறினர். இதையடுத்து, பெற்றோர் உதவியுடன் சம்பந்தப்பட்ட ஆசிரியர் குறித்து பள்ளி கல்வித்துறைக்கு புகார் அளித்ததுடன், குழித்துறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்தனர்.

இதையடுத்து, இந்த புகாரின்பேரில் குழித்துறை அனைத்து மகளிர் போலீஸார் போஸ்கோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வேலவனை கைது செய்தனர். தேர்வு அறையில் வைத்து மாணவியிடம் சில்மிஷம் செய்த ஆசிரியரின் செயல் பெற்றோர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 255

0

0