ஆசைவார்த்தை கூறி 16 வயது சிறுமி பலாத்காரம்… இளைஞருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை ; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Author: Babu Lakshmanan
13 August 2022, 5:57 pm
Quick Share

கரூர் : கரூரில் 16 வயது பள்ளி மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி எஸ்.பி நகரில் வசிப்பவர் மணிகண்டன். இவரது 16 வயது மகள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். சிறுமியின் தாத்தா பன்னீர் செல்வம் நடத்தி வரும் சலூன் கடையில் 7 மாதமாக பணியாற்றிய ஜெயராமன், சிறுமியிடம் நேரிலும், போனிலும் பேசி வந்துள்ளார்.

அவரிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடந்த 11.01.2021 அன்று சிறுமியை வீட்டை விட்டு வெளியில் வரவழைத்து, அவரை கடத்திக் கொண்டு பேருந்தில் ஈரோடு மாவட்டம் பெரிய வலசில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி 15 நாள் குடும்பம் நடத்தியுள்ளனர். அப்போது, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை குறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

சிறுமியின் தந்தை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், கடந்த 24.01.2021 அன்று அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார். புகாரினை பெற்றுக் கொண்ட போலீசார் அவர்களை தேடி கண்டு பிடித்து ஜெயராமனை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு கரூர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் தன் மீது போடப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறி ஜெயராமன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்திருந்தார். அந்த மனுவினை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

இன்று இவ்வழக்கை விசாரித்த மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி நசீமா பானு, சிறுமியை கட்டாயப் படுத்தி திருமணத்திற்காக கடத்திய குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 20 ஆண்டு சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்ததுடன், அவற்றை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.

Views: - 570

0

0