இலங்கைக்கு கடத்த இருந்த 2,500 கிலோ பீடி இலைகள் பறிமுதல் ; தப்பியோடிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை

Author: Babu Lakshmanan
17 August 2022, 3:40 pm
Quick Share

தூத்துக்குடி அருகே இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த 2,500-கிலோ பீடி இலைகளை பறிமுதல் செய்த கடலோர பாதுகாப்பு குழும போலீசார், தப்பியோடிய நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

தூத்துக்குடி வெள்ளைப்பட்டி கடற்கரை பகுதியில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் நேற்று இரவு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், முதல் நிலைக் காவலர்கள் பகவதி பாபு, ஊர்க்காவல் படை காவலர்கள் கிறிஸ்துராஜா, நிக்க்ஷன் ஆகியயோர் வெள்ளைப்பட்டி கடற்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அந்த சமயம் கடற்கரையிலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் கடலில் படகில் இலங்கைக்கு செல்ல இருந்த படகை மடக்கிப் பிடிக்க முற்படும்போது, போலீசாரை கண்டதும் படகில் இருந்த நபர்கள் தப்பிப்பதற்காக வெள்ளை நிற மூட்டைகளை கடலில் வீசிவிட்டு தலைமறைவாகி தப்பி ஓடிவிட்டனர்.

இதைத்தொடர்ந்து, உடனடியாக கடலில் மிதந்த வெள்ளை நிறமூட்டைகளை கைப்பற்றி சோதனை மேற்கொண்டதில், 28 பண்டல்களில் 2,500-கிலோ எடை கொண்ட பீடி இலைகள் இருப்பதை கண்டனர்.

தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த கடலோர குழும காவல் நிலையம் கொண்டு வந்தனர். பின்பு இந்த கடத்தல் சம்பவம் குறித்து கடலோர காவல் துறை ஆய்வளர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

Views: - 310

0

0