3 முறை தேசிய விருது வென்ற நடிகர் நெடுமுடி வேணு காலமானார் : மருத்துவமனையில் உயிர் பிரிந்தது!!
Author: Udayachandran RadhaKrishnan11 October 2021, 1:27 pm
பிரபல நடிகர் நெடுமுடி வேணு கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
பிரபல நடிகர் நெடுமுடி வேணு மலையாள திரைப்படத்தில் அறிமுகமானவர். இவர் தமிழில் வெளியான இந்தியன் படத்தில் சிபிஐ ஆபிசராக கலக்கியிருப்பார். அதைத்தொடர்ந்து அந்நியன், பொய் சொல்லப்போறோம், சர்வம் தாளமயம், உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
இயக்குநர் ஷங்கரின் ஆஸ்தான நடிகராக வலம் வரும் நெடுமுடி வேணு இந்தியன் -2 படத்தில் நடித்து வருகிறார். 1978ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமான இவர் பல்வேறு நாடகங்களிலும் நடித்துள்ளார்.
கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள நெடுமுடியில் பிறந்த இவரின் இயற்பெயர் கேசவன் வேணுகோபால். 1990ல் வெளியான His Highness Abdullah என்ற மலையாள திரைப்படத்தில் சிறந்த குணச்சித்திர நடிகராக தேர்வாகி தேசிய விருதை வென்றார். மூன்று முறை தேசிய விருது வென்ற இவர், கேரள மாநில விருது, பிலிம் பேர் விருது உட்பட பல்வேறு விருதுகளை வென்றுள்ளார்.
73 வயதாகும் நெடுமுடி வேணு, கொரோனா தொற்றால் பாதிப்படைந்து சிகிச்சை பெற்று பின் குணமாகினார். இந்த நிலையில் நேற்று உடல்நலம் சரியில்லாததால் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவரது உடல்நிலையை கண்காணித்து வந்த மருத்துவர்கள் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவித்திருந்த நிலையில் அவரது உயிர் பிரிந்தது. இவரது மறைவுக்கு மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு சினிமாத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
0
0