தஞ்சை, திருவாரூர் உள்பட 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை : சென்னை வானிலை ஆய்வு மையம்
25 September 2020, 2:28 pmசென்னை : தஞ்சை, திருவாரூர் உள்பட 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், உள் தமிழக மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்தில் வட கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச கடம்பூர் (தூத்துக்குடி) 8 செ.மீ மழையும், நெமூர் (விழுப்புரம்) 4 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் மேற்கண்ட பகுதிக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.