கீழடி அகழாய்வில் ஆச்சர்யம்: ஒரே குழியில் அடுத்தடுத்து கண்டெடுக்கப்பட்ட தமிழரின் பொக்கிஷங்கள்.!!
Author: Aarthi Sivakumar18 August 2021, 9:44 am
சிவகங்கை: கீழடி ஏழாம் கட்ட அகழாய்வில் ஒரே குழியில் அடுத்தடுத்து நான்கு சிவப்பு நிற பானைகள் கண்டறியப்பட்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
கீழடியில் 7ம் கட்ட அகழாய்வு பணி கடந்த பிப்ரவரி முதல் தமிழக தொல்லியல் துறை ஆணையர் சிவானந்தம் தலைமையில் நடந்து வருகிறது. இந்நிலையல், கீழடி, அகரம், கொந்தகை ஆகிய மூன்று தளங்களிலும் தலா எட்டு குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.
கீழடியில் இதுவரை மூடியுடன் கூடிய பானை, உறைகிணறுகள், வரி வடிவ பானை ஓடுகள், சுடுமண் பகடை, கல் உழவு கருவி, வெள்ளி முத்திரை நாணயம் உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டது. சுமார் 2 ஆயிரத்து 600 ஆண்டுகளுக்கு முற்பட்ட பண்டைய கால மக்கள் பயன்படுத்திய பொருட்கள் அடுத்தடுத்து வெளி வருவதால் பலரும் கீழடி அகழாய்வு பணியை ஆர்வமுடன் கண்டு செல்கின்றனர்.
இதையடுத்து செப்டம்பருடன் பணிகள் நிறைவடைய உள்ள நிலையில், கீழடி அகழாய்வில் ஒரு குழியில் சிவப்பு நிற சிறிய பானை கண்டெடுக்கப்பட்ட நிலையில் அடுத்து ஒரு பெரிய அடர் சிவப்பு நிற பானை 60 செ.மீ உயரத்தில் கிடைத்தது. அதன் அருகிலேயே தேமடைந்த நிலையில் மற்றொரு பானை கிடைத்தது. அதேபோல் அதன் அருகில் கிண்ணம் போன்ற கருப்பு சிவப்பு நிற பானையும் வெளிப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக ஒரே குழியில் அடுத்தடுத்து நான்கு சிவப்பு நிற பானைகள் கண்டறியப்பட்டது ஆய்வாளர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. கீழடியில் வெளிநாட்டு வணிக தொடர்புகள் நடந்திருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ள நிலையில், வணிகர்களை கவர்வதற்காக இந்த சிவப்பு நிற பானைகளை பண்டைய கால மக்கள் பயன்படுத்தியிருக்க கூடும் என கருதப்படுகிறது.
0
0