70 வயது முதியவரை கொடூரமாக வெட்டிக்கொன்ற கும்பல் ; போலீசார் விசாரணையில் பகீர் தகவல்… திருவள்ளூரில் அதிர்ச்சி

Author: Babu Lakshmanan
8 September 2022, 11:25 am
Quick Share

திருவள்ளூர் ; பொன்னேரியில் சாலையோரத்தில் நின்றிருந்த 70 வயது முதியவரை 3 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை சேர்ந்தவர் சுப்பையா. 70 வயது முதியவரான இவர் கட்டுமான தொழிலாளியாக பணி செய்து வருகிறார். சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த முதியவர் சுப்பையாவை மர்ம நபர்கள் மூன்று பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் தலையில் அரிவாளால் சரமாரியாக வெட்டியது.

இதில், படுகாயமடைந்து ரத்த வெள்ளத்துடன் மயங்கி விழுந்த முதியவரை அருகில் இருந்தவர்கள் பொன்னேரி அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைஅளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போது, செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

உடலை மீட்டு பொன்னேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், சுப்பையா அங்குள்ள முனீஸ்வரர் கோவிலை நிர்வாகம் செய்து வந்த போது, அவருக்கும் அங்குள்ள சிலருக்கும் பிரச்சனை இருந்து வந்தது.

இந்த நிலையில், மூன்று பேர் கொண்ட கும்பல் அவரை அரிவாளால் வெட்டிக்கொலை செய்தது தெரிய வந்தது. தொடர்ந்து தப்பியோடி தலைமறைவாக உள்ள கொலையாளிகள் மூன்று பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Views: - 422

0

0