பெற்றோருக்கு பயந்து மதிப்பெண்ணில் திருத்தம்… ஆசிரியர் கண்டித்ததால் வீட்டுக்கு போக அச்சம்… 8ம் வகுப்பு மாணவி செய்த விபரீத செயல்..!!

Author: Babu Lakshmanan
3 November 2022, 10:51 am
Quick Share

நாகை : நாகையில் தேர்வுத் தாளில் மதிப்பெண்ணை திருத்தியதை ஆசிரியர் கண்டித்து பெற்றோரிடம் சொல்லியதால் எட்டாம் வகுப்பு மாணவி குளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகை தெற்கு பால்பண்ணைச்சேரி சிவசக்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் மாதவன். இவரது மகள் ஸ்ரீநிதி. இவர் நாகையில் உள்ள நடராஜன் தமயந்தி ஆங்கில தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில், மாணவி கணித தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்துள்ளதாக தெரிகிறது.

அதனால் நேற்று ஆசிரியர் பெற்றோரிடம் தேர்வு விடைத்தாளில் கையெழுத்து வாங்கி வரச் சொல்லி உள்ளார். மாணவி தேர்வுத் தாளில் மதிப்பெண்ணை திருத்தி கையெழுத்து வாங்கியதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மாணவியின் தேர்வுத் தாளை வாங்கி பார்த்த ஆசிரியர் மதிப்பெண் திருத்தியிருப்பதை பார்த்து ஆசிரியர் கண்டித்து மாணவியின் தந்தைக்கு போன் செய்யச் சொல்லி உள்ளார். இதனால் பயந்து போன மாணவி பள்ளி முடிந்து வந்தவர், வீட்டின் அருகே உள்ள குளத்தின் அருகே ஸ்கூல் பேக்கை வைத்து விட்டு குளத்தில் குதித்து உள்ளார். தண்ணீரில் மூழ்கிய மாணவியை மீட்டு நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சம்பவம் குறித்து நாகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 359

0

0